பக்கம் எண் :

122கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

அவளும் நானும்

எண்சீர் விருத்தம்

பொங்கிவரும் நிலவொளியில் மலர்ந்து நிற்கும்
    பூத்தோய்ந்து வருதென்றல் உடலை நீவ
சங்கொளிதோய் மாடத்துத் தங்கி இன்பம்
    தருகுடும்ப விளக்கெடுத்துச் சுவைத்தி ருந்தேன்;
மங்கையவள் என்குடும்ப விளக்காம் நல்ல
    மனைவிவந்து ‘யார்உரைத்த திந்நூல்?’ என்றாள்;
எங்கவிபா ரதிதாசன் என்றேன்; `அத்தான்!
    எனக்கவரை ஒருசிறிதும் பிடிக்கா’ தென்றாள்

உயர்கவிஞன் உணர்ச்சிமிக்கான் புரட்சிப் பாடல்
    உரைக்கின்றான் தமிழமிழ்து படைத்துக் காக்கும்
செயலினையே புரிகின்றான் இருந்தும் ஏனோ?
    வெறுக்கின்றாய்? செவ்விதழாய்! என்றேன்; அன்னாள்
`மயல்புரியும் மங்கைதந்த இன்பம் என்றன்
    மாதமிழுக் கீடில்லை என்று சொன்னால்
வயிறெரிய மாட்டாதோ? பெண்கள் கூட்டம்
    வாழ்த்திடுமோ? விட்டுவிடும் கவிஞர் பேச்சை’

என்றுரைத்தாள்; பெண்மயிலே! தமிழில் ஊறும்
    இன்பநிலை கண்டவர்கள் இந்த ஒன்றே
நன்றென்பர்; நான்கூட அப்ப டித்தான்
    நடையழகி! நானுன்னை மணந்து கொண்ட
அன்றுன்பால் அழகிளமை நிறையக் கண்டேன்
    ஆண்பிள்ளை ஒன்றுபெற்று விட்ட பின்னர்
இன்றுளதோ அவ்விளமை? ஆத லாலுனுன்
    இன்பத்தும் சிறுகுறைவு காணல் உண்மை