எழில் எண்சீர் விருத்தம் வளம்நிறைந்த தமிழ்மொழிக்கு விரும்பிச் சாத்தன் வழங்குமணி மேகலையில், அவளுக் கென்றே உளம்நிறைந்து முப்பொருளால் இளங்கோச் சேரன் உருவாக்கித் தந்துமகிழ் சிலம்பில், கம்பன் பழங்கதையை மெருகேற்றிப் பாரோர் போற்றப் பாவையவள் மகிழவென்று தந்த நூலில், களங்கமின்றிக் கோவைசெய்து தேவன் தந்த கலைசிந்தா மணியிலும்நான் எழிலைக் கண்டேன். விண்முட்டும் கோபுரத்தில், அங்குச் சாந்து வினைவல்லான் அமைத்தசுதைப் பாவை தன்னில், கண்ணெட்டும் போதாதோ எனுமா றாங்குக் கற்றச்சன் வடித்தகருங் கல்லின் சிற்பம், பண்ணொட்டும் யாழேந்தும் கல்விப் பாவை பரிந்துநடம் புரிந்தருளும் தோற்றந் தன்னை எண்ணட்டும் இங்கிருந்தே என்ற நோக்கில் எழுப்புகலைக் கூடத்தில் எழிலைக் கண்டேன். கண்ணொன்றால் காவியத்தை ஆக்கிக் காட்டும் காரிகையார் நடையுடையில் எழிலின் தேக்கம், மண்தின்றால் தீமைஎன அறியாப் பிள்ளை மழலைமொழிப் பார்வைகளில் எழிலின் ஓட்டம், விண்சென்று மீளுகின்ற பட்டம் விட்டு விளையாடும் சிறுசெருவில் எழிலின் பாய்ச்சல், தண்ணென்ற புனலோடைச் சலச லப்பில் தகுமெழிலின் பளபளப்பு விளங்கக் கண்டேன். |