பக்கம் எண் :

70கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

இன்பமில்லை

எண்சீர் விருத்தம்

எத்தனைதான் காத்திருந்தும் என்ம னத்தே
                இடங்கொண்டாள் எழில்கொண்டாள் நகைக்கும் பற்கள்
முத்தனையாள் வரவில்லை பொறுத்தி ருக்க
                முடியவில்லை, அறிஞரவர் வரைந்து தந்த
புத்தகத்தைப் புரட்டிவிட்டுப் பேசா தங்குப்
                பூட்டிவிட்ட வானொலியைத் திருப்பி விட்டேன்;
அத்தனையும் வீணாயிற் றென்னி டத்தே
                அவளில்லை ஆதலினால் இன்ப மில்லை!

அமையாத அலைக்கடலின் கரைய மர்ந்தேன்
                அலைநிமிர்ந்து காதலினை நிமிர்த்த தங்கே;
இமையாடும் பொழுதேனும் இருந்தேன் அல்லேன்.
                எழிற்பூங்கா வுள்நுழைந்தேன், தென்றல் வந்து
சுமையாக மோதிற்று; நிழற்ப டத்தால்
                துயர்தீரும் எனநினைந்துச் சென்றேன் அங்கும்
உமையாளும் சிவனாரும் காதல் கூர
                உருகியணைந் தமர்ந்திருக்கக் கண்டேன் கண்டேன்;

மனமுடைந்து வீடடைந்து மாடி யேறி
                மலர்பரவு பஞ்சணையில் புரண்டி ருந்தேன்
எனைமறந்த அவள்தந்த இன்பம் போன்ற
                இன்சுவைப்பால் அருந்தியபின் கசந்த தாலே
சினமடைந்தேன்; முழுநிலவு கார்கி ழித்துச்
                சிறிதாகச் சாளரத்துள் கதிர்வீ சிற்றே
அனநடையாள் என்னருகே இன்மை யாலே
அதன்பாலும் அழகில்லை இன்பம் இல்லை! 3