பக்கம் எண் :

52கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

25. வாழ்வா? சாவா?

அறிவுபெறச் சிந்திக்க ஆய்வு செய்ய
      அதற்குரிய நூல்கற்க மேன்மை காணக்
குறியுடையோன் பள்ளிக்குட் செல்லுங் காலை
      குலவவரும் இந்தியுடன் ஆங்கிலந்தான்
தெரிவுசெயும் மொழியென்பார்க் கடிப ணிந்தால்
      தென்னாட்டு மொழியெதற்குத் தமிழைப் பேசித்
திரிகின்ற இனமெதற்கு? மான மின்றித்
      தின்றலையும் வாழ்வெதற்கு? சாவே மேலாம்.

நான்பிறந்த பொன்னாடு, தவழ்ந்து நின்று
      நடந்தோடி விளையாடி மகிழ்ந்த நாடு,
தேன்சுமந்த மலர்வருடி மணந்து வந்து
      தென்றலெனைக் குளிர்விக்கக் களித்த நாடு,
வான்படர்ந்த புகழ்மிகுக்கும் எனது நாட்டை
      வாழ்த்துதற்கு வங்கமொழி வேண்டு மென்றால்
ஏன்பிறந்தேன் தமிழ்நாட்டில்? பிறந்த பின்னும்
      இருக்கின்றேன் இருக்கின்றேன் சோற்றுக் காக.

தோற்கருவி துளைக்கருவி நரம்பிற் கட்டும்
      துணைக்கருவி வெண்கலத்துக் கருவி என்ற
நாற்கருவி முழங்குமிசை யரங்கில் ஏறி
      நான்பாடத் தெலுங்குமொழி வேண்டு மென்றால்
வேற்கருவி எடுத்துவிளை யாடுந் தோள்கள்
      வீறிழந்து சீரிழந்து தமிழன் என்ற
பேர்க்குரிமை பூண்டின்னும் வாழு கின்றேன்
      பிறப்படிமை யானவற்கேன் பட்டுக் குஞ்சம்?