பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்91

இரியா இருளை இரியச் செய்வான்
பெரியார் அண்ணா பெரும்பணி புரிநாள்
இடையறா அப்பணி இடையூ றின்றி
நடைபெறப் பேரொளி நல்கிய தக்கதிர்;
இருளால் மறைபடும் இனமொழி உணர்வுகள்
தெரிதர லாயின தெளிந்தனம் யாமே;
தெளிந்தனம் ஆதலின் குழைந்துள பனியில்
விழுந்தினி அழியோம் விழிப்புடன் நடப்போம்;
விழியொளி பெற்றும் வீழ்ந்ததில் மூழ்கின்
பழிபெறும் எம்மினும் இழிந்தவர் இலையால்;
விழியுளார் படுகுழி வீழ்வதும் உண்டோ?
ஒருகால் உடையவன் ஊன்றுகோல் பெறலாம்
இருகால் உடையோன் எவனதை விழைவான்?
வளமிலாமொழிகள் வருமொழிச் சொற்களைக்
கொளலாம் அதனாற் குற்றமொன் றில்லை;
உயர்தனிச் செம்மொழி ஒப்பிலாத் தமிழ்மொழி
அயன்மொழிச் சொற்களை அணுகுதல் முறையோ?
முட்டிலாச் செல்வர் மற்றவர் பாற்கடன்
பெற்றிட முனைதல் பேதைமை யன்றோ?
அதனால்
சந்தனப் பொதியச் செந்தமிழ் மாமலை
தந்தருள் தென்றலில் தனிநடை பயில்வோம்;
தளர்நடை தவிர்த்துத் தனிநடை கொடுத்த
வளரிளங் கதிரை வாயுற வாழ்த்துவம்;
பலமொழி பயின்றும் பைந்தமிழ்ச் சோலையுள்
உலவிய தென்றலை உள்ளுறப் போற்றுவம்;
இசைத்தமிழ் சுவைத்திட ஈகுவர் பெரும்பொருள்;
நாடகத் தமிழ்க்கும் நல்குவர் அவ்வணம்;
இயற்றமிழ் எனினோ ஈயார் ஒருபொருள்;