பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்131

தீண்டாமை சாதிமதக் குப்பை மாய்க்கும்
       தீயாகிப் பகுத்தறிவுச் சுடரைப் பாய்ச்சும்
தூண்டாத விளக்காகி மாந்த ராகத்
       தொழும்பர்தமை ஆக்குகிற நெருப்பும் ஆனார்.

உயர்வானில் சிதறிவிழும் கல்லால் பூமி
       உருண்டைக்குப் பழுதின்றிக் காக்கும் காற்று;
செயலறியா நம்மினத்தார், ஆரி யத்தின்
       சிந்தனையில் வெடித்துவிழும் கற்கள் தாக்க
மயலாகி அழியாமல் பெரியார் காத்தார்;
       மாந்தரெனப் பழுதின்றி வாழச் செய்தார்;
புயல்போலச் சினந்தெழுந்து வீசி னாலும்
       பூமணக்கும் தென்றலென இனிமை செய்வார்.

பகலவனும் குளிர்மதியும் விண்ணுக் குண்டு
       பார்ப்பவர்கள் அளந்தறியா அகலம் உண்டு;
பகுத்தறிவுப் பகலவனும் ஆயந்து தோய்ந்து
       பண்பட்ட கூர்மதியும் அளந்து பார்த்துப்
புகலறியாச் சிந்தனையும் பெரியார்க் குண்டு;
       பொலிவுதரும் * உடுக்கணங்கள் விண்ணுக்குண்டு
புகழ்பரப்பும் தொண்டருடுக் கணம்போற் சுற்றிப்
       பொலிவுதரும் விண்ணாகி விளங்கு கின்றார்.

அனைத்துலக மாந்தரெனும் குமுகா யத்துள்
       ஐயாவும் ஓரணுவே; அணுவின் ஆற்றல்
கனைத்துவரும் ஆரியமாம் நாக சாகி
       கனல்விழுந்த பஞ்சாகிப் பொசுங்க வீழ்த்தும்;
மனத்துவளர் மடமையெனும் கோட்டை எல்லாம்
       மண்ணோடு மண்ணாகத் தூள்தூள் ஆக்கும்;
இனத்துணர்வைப் பகுத்தறிவை ஆக்கும் ஆற்றல்
       எந்நாளும் அவ்வணுவுள் நிறைந்தி ருக்கும்.


*உடுக்கணம் - வின்மீன் கூட்டம்