பக்கம் எண் :

172கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

எழுத்துலகில் பேச்சுலகில் தாய்மொ ழிக்கோர்
       எல்லையிலாத் தனிமிடுக்கைப் படைத்து விட்டான்,
முழுத்திறமை கொண்டவன்றன் மொழித்திறத்தால்
       முத்தமிழ்க்கோர் பரம்பரையைத் தோற்று வித்தான்
வழுக்கிவிழும் விகடநடை கொச்சைப் பேச்சு
       வம்பர்தருங் கலப்புநடை எங்கே? எங்கே?
அழுக்ககலச் செய்துவிட்டான் திருப்பு மையம்
       ஆகிநின்று தாய்மொழிக்குக் காவல் செய்தான்.

வடபுலத்து வெறிமனத்தர் கூடி நின்று
       வளர்மொழியாம் தமிழ்மொழிக்கு மாறாய் இங்குப்
படபடத்த ஒலிஎழுப்பும் இந்தி தன்னைப்
       பரப்புதற்கு, வஞ்சகத்தால் புகுத்து தற்குப்
படமெடுத்த பாம்பெனவே முனைந்து விட்டார்;
       பதைத்தெழுந்து நம்அண்ணன தமிழர் நாட்டுள்
விடமறுத்தான் படையெடுத்தான் போர்தொ டுத்தான்
       வீரத்தால் தாய்மொழிக்குக் காவல் செய்தான்.

செந்தமிழைக் காக்குமொரு கொள்கை பூண்டு
       சீறிவரும் மறக்குலத்தின் எழுச்சி கண்டோம்;
உந்துகளில் தமிழ்எழுதும் கைகள் கண்டோம்;
       ஓர்ந்துணரின் இவற்றுக்குப் பின்னே நிற்ப
தெந்தஉரு? காஞ்சிநகர் உருவம் அன்றோ?
       ஏந்தலவன் ஊட்டிவிடும் உணர்ச்சி யன்றோ?
எந்தவிதம் நோக்கினுமே அவன்றன் செய்கை
       இனியதமிழ் காக்கின்ற செயலே ஆகும்.

பெற்றெடுத்த தாய்நாட்டைத் தமிழ்நா டென்று
       பேர்சொல்ல வைத்தவன்யார்? வாய்மை வெல்லும்
பெற்றிமைக்குக் கோட்டைமுகம் சான்று சொல்லும்;
       பெரியார்முன் உந்திவிட்ட இந்திப் போரில்