பக்கம் எண் :

184கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

இளைஞன்:தாயகங் காப்பேன் தளரேன் உறுதி
ஏயுமென் னுயிரும் ஈகம் புரிவேன்;
செருக்களஞ் செல்லும் உருக்கொளும் இவர்யார்?
அருச்சுனன் மைந்தன் அபிமன் இவரோ?
முதியவர்:இல்லை அபிமன் இலனவன்; இளையோய்
நல்லைநீ; நினது நாட்டிற் குரியவர்
அறிவிலை நின்னின் அயலவர் தம்மைத்
தெரிந்துளை நன்குன் திருநா டிதனுள்
அவன்சிலை காணல் அறியாப் பேதைமை;
இளைஞன்:எவரெவர் சிலையோ ஈங்குள அவைதாம்
பேதைமைச் செயலோ? . . . . . . . .
முதியவர்:. . . . . . . . பேதைமை யொன்றோ?
தீதும் நன்றுந் தெரியா தொழுகும்
அடிமை என்பதன் அறிகுறி யாகும்;
அடிபட அடிபட அரத்தம் சிந்திக்
கொடிவிடா துயிர்விடுங் கொள்கை மறவர்,
அடிமையும் மிடிமையும் அயலவர் ஆட்சியும்
பொடிபட உரிமை பூண்கலஞ் செலுத்திச்
செக்குடன் உழன்று சிறையுள் வாழ்ந்தோர்
  இத்தகு செயலோர் எத்தனை மாந்தர்;
அனைத்தும் மறந்தோம் அயலோர்த் தொழுதோம்;
இளைஞன்:நன்றி பெரியீர் நாட்டுணர் வூட்டி
இன்று தமிழனென் றென்னை யுணர்த்தினீர்
அந்தநன் மறவன் யாரென விளம்புக;
முதியவர்:கன்னற் சாறெனக் கவிதை படைப்பவன்
கருதலர்க் காணிற் கடும்பகை உடைப்பவன்
தனித்துணான் வெறுப்புறான் தகாப்பழிக் கஞ்சுவான்
புகழ்வரும் எனிலோ போக்குவன் உயிரும்
இளைஞன் பெருமையன் இளம்பெரு வழுதி
கடலுள் மாய்ந்தான் காளை யிவனே;