பக்கம் எண் :

192கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

வழுதி:ஒருமை ஒற்றுமை ஆயிரு சொல்லின்
பொருண்மை யொன்றோ . . . . . . . .
நாகனார்:. . . . . . . புகலும் கேண்மின்
ஒன்றுடன் மற்றொன் றிணைவ தொற்றுமை;
ஒன்றினுள் ஒன்று பொன்றுவ தொருமை;
இணைந்தும் தனித்தும் இயங்குவ தொற்றுமை;
அணைத்தபின் ஒன்றா யமைவ தொருமை;
அடுக்குத் தொடர்போல் அமைவ தொற்றுமை;
இரட்டைக் கிளவியென் றிருத்தல் ஒருமை;
வழுதி:இரண்டும் ஒன்றென் றிருந்தோம் தெளிவுறத்
திருந்தும் பொருண்மை தேர்ந்தெமக் களித்தீர்;
நாகனார்:விந்தை மீதூர் வியன்பெறு செல்வம்
முந்தையர் நமக்குத் தந்தவை பலப்பல;
கூம்பாச் செல்வம் ஓம்பா நிலையிற்
சோம்பித் திரியிற் றொகுத்தவை பாழாம்;
போதும் அவையெனப் பொந்திகை பெறுதல்
தீதாம்; ஆதலின் தெள்ளிய புலத்திற்
கூரறி வுக்கலங் கொண்டுழு வோர்தாம்
ஊரினர் உணக்கரு வூலம் நிரப்பிப்
புரத்தல் வேண்டும் புதுவன விளைத்து;
குழலி:முந்தையர் முனைந்து தந்தவை யனைத்தும்
உந்தும் உணர்வின் ஒம்புதும் ஒம்புதும்;
வழுதி:ஈட்டுதுஞ் செல்வம் கூட்டுதும் மிகவே
நாட்டிற் பெரும்புகழ் நாட்டுதும் யாமே.