பக்கம் எண் :

ஊன்றுகோல்83

பிறதுறை வல்லா ராகப்
       பிறங்குதல் உடையார் இந்தத்
துறையிலும் இறங்கி நின்று
       தூய்மையைக் கலக்கு கின்றார்;
நிறைவுறுங் கைகால் இல்லார்
       நெடும்புனல் நீந்த வந்தால்
கரைதனை அடைதல் உண்டோ?
       கையறு நிலைதான் உண்டு. 4

முற்றுறக் கல்லார் தாமும்
       முயல்கிறார் பாடல் யாக்க,
வெற்றரைத் தட்டிக் கேட்க
       வீறுகொள் புலவ ரில்லை
மற்றைநாள் வாழ்வைச் சற்றும்
       மனத்தினுட் கொள்ளா ராகிப்
புற்றுறை ஈயல் போலப்
       புறப்படல் காணு கின்றோம் 5

(அறுசீர்விருத்தம்-வேறு)

முற்றாத கல்வி நலம், முழுமைபெறாக்
       கவிதைவளம், முனைப்பில் நின்று
வெற்றாக ஆர்ப்பரிக்கும் பேச்சுவளம்,
       வீமகவி என்ற பேரும்
பெற்றார்தாம் தனவணிகர் நாட்டகத்துப்
       பெருங்கவிஎன் றெடுத்துக் கூறிச்
சுற்றாத இடமில்லை, அப்புலவர்
       சுடர்மணிக்கு நண்ப ரானார் 6

“கலைமகளின் அருள்பெற்ற கவிஞன்யான்
       கண்ணசைத்தால் என்முன் நிற்பாள்;
சொலுமொழிகள் கேட்டேவல் செய்திடுவாள்;
       சொன்னதுதான் பலிக்கச் செய்வாள்;
புலவனென துளமகிழப் பொருள்தந்தால்
       பூரித்துப் பாடல் சொல்வேன்
அலைமகளின் அருள்கிடைக்கும் தராவிடினோ
       அறம்பாடித் தொலைப்பேன்’ என்பார் 7