பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்183

அன்று + கண்டேன்=அன்று கண்டேன்

இன்று + சொல்கின்றேன்=இன்று சொல்கின்றேன்

என்று + பார்த்தாய்=என்று பார்த்தாய்

13. நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத் தொடர்க் குற்றிய லுகரங்களின் முன்னும் வலி மிகாது.

ஏறு + தழுவினான்=ஏறு தழுவினான் (நெடிற்றொடர்)

எஃகு + கொடிது=எஃகு கொடிது ( ஆய்தத் தொடர்)

பழகு + தமிழ்=பழகு தமிழ்(உயிர்த் தொடர்)

சால்பு + கண்டேன்=சால்பு கண்டேன் ( இடைத் தொடர்)

14. வினையெச்சமாக வரும் மென்றொடர்க் குற்றியலு கரத்தின் முன்னும் வல்லினம் மிகாது.

நுழைந்து + செல்=நுழைந்து செல்

15. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் முன் வல்லினம் மிகாது.

காணிய + சென்மோ=காணிய சென்மோ

16. வியங்ககோள் வினை முற்றின் முன்னும் வலிமிகாது.

வாழிய + பெரிதே=வாழிய பெரிதே

வாழ்க + பல்லாண்டு=வாழ்க பல்லாண்டு

17. ‘யா’ என்னும் முதல்வினாவின்முன் வரும் வல்லினம் மிகாது.

யா + சிறந்தன=யா சிறந்தன

13. இடம் விட்டெழுதுதலும் சேர்த்தெழுதுதலும்

எழுத்துக்களையோ, சொற்களையோ இடையீடின்றி ஒரே தொடர்ச்சியாக எழுதிச் சென்றால் கற்பார்க்கு ஒன்றும் விளங்காமல் இடர்ப்பட நேரிடும். ஆகவே, எழுதுங்கால், சொற்களுக்கிடையே தக்க அளவு இடம் விட்டும், அஃதே போன்று பத்திகட்கிடையே இடம் விட்டும், பொருள் விளக்கும் துணைகளாகிய குறியீடுகளைப் பயன்படுத்தியும் எழுதுதல் வேண்டும். அழகும் தெளிவும் கருதி இவ்வாற செய்ய வேண்டுவது மாணாக்கர் கடனாகும். கீழ்க்காணும் சொற்றொடர்களைக் காணுங்கள்:-