பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்101

தடை செய்யப்பட்டிருந்தால் எவ்வளவோ நன்மையாக இருந்திருக்கும். அப்பேறு கிட்டவில்லை.

1978 இல் பணியிலிருந்து விடுதலை பெற்றேன். ஆசிரியப் பணி உயரிய பணிதான். மாணவர்களை நன் மக்களாக உருவாக்கும் பணிதான். தீமை செய்யாமல் நன்மை செய்தற்கேற்ற பணிதான். எனினும் என் இலக்கியப்பணிக்கு என் உரிமையுணர்வுக்குத் தடையாக இருப்பது போன்ற வுணர்வு ஊடாடிக் கொண்டே யிருந்தது. அதனால் ஓய்வு பெற்றவுடன், மகிழ்வு பொங்கித் ‘திறந்தன கதவுகள்’ என்ற தலைப்பில் விடுதலைப் பாடல் பாடினேன். மிகுதியாக எழுதலாம் எனத் திட்டமிட் டிருந்தேன். ஆனால் கட் படலம் படர்ந்து, பார்வை மங்கி, எழுதவும் படிக்கவும் இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. எட்டாண்டுகளை வீணே கழித்தேன். ஓய்வுச் சம்பளம் முந்நூறு கிடைக்கவில்லையென்றால் என் நிலை யாதாகியிருக்குமோ? கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. ஆயினும் எவரும் என்னை வளமானவன் என்றே எண்ணிக் கொண் டிருக்கின்றனர். வறுமை தோன்றாமல் அரசன் போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்படி? நண்பர்களின் துணை தான். உடலுழைப்பாலோ, பொருளாலோ ஓருதவியும் எவர்க்கும் செய்தறியேன். எனினும் ஏன் எனக்கு இப்படி உதவுகிறார்கள்? என் நெஞ்சிற் கொலுவிருக்கும் என் தமிழன்னைதான் விடை தர வேண்டும்!