பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 147 |
அவற்றை நூல் வடிவிற் கொணர வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியதில்லை. முடியரசன் கவிதைகள் என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழண்ணலுக்கு, என் பாடல்களை நூல் வடிவிற் கொணர வேண்டுமென்ற ஆர்வந் தோன்ற, என் பாடல்களை யெல்லாம் தொகுத்து, வகைப் படுத்தி, அச்சுக்குக் கொடுத்தார். அச்சகத்திற்குக் கடன்; தாளும் கடன் வாங்கினார். ‘முடியரசன் கவிதைகள்’ எனப் பெயர் சூட்டினார். என் பெயரை நூலுக்குச் சூட்டக் கூசிய நான், ‘பாரதிதாசன் பாதையில்’ எனப் பெயர் வைக்கலாமென்று கூறினேன். அதனை மறுத்து ‘முடியரசன் கவிதைகள்’ என்றே சூட்டி விட்டார். அணிந்துரை அவர் எழுத வேண்டும். ஆனால் நூல் அச்சாகி முடிவு பெற்ற நிலையிலும் அவர் எழுதவில்லை. அப்பொழுது கலைமகள் அச்சகத்திலிருந்த சாமி. பழநியப்பன், ‘அணிந்துரை தருகிறீர்களா? அல்லது நான்கு பக்கங்களை ஒன்றுமில்லாது விட்டு, இறுதியில் தமிழண்ணல் என்று அச்சடித்து விடவா?’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். தமிழண்ணல் அப்பொழுதே அச்சகத்தில் அமர்ந்து, நான்கு பக்கங்கள் அணிந்துரை எழுதிக் கொடுத்தார். ‘வாழையடி வாழை’ யென்ற தலைப்பில் எழுதிக் கொடுத்தார். அச்சாகி வெளி வந்தது. காண்போரெல்லாம் என்னிடமே, என் கவிதையைப் பாராட்டுவதற்கு மாறாக, அவர் அணிந்துரையைத் தான் பாராட்டியுரைப்பர். அவ்வளவு சிறப்புற அமைந்திருந்தது. என் கவிதைக்கும் பெருமை. அவர் பொதுப்படையாக எழுதியிருப்பினும் சிலருடைய வெறுப்பையும் பெற்றது. தம்மைச்சாடியிருப்பதாக அவர்கள் கருதியமையால் நேர்ந்த விளைவு அது. மேலும் சிலர், ‘அவரைச் சாடியிருக்கிறார், இவரைச் சாடியிருக்கிறார்’ என்று தூண்டி விட்டுக் கொண்டும் இருந்தனர். இந்நூல் தமிழ் நெறிக் காவலர் மயிலை. சிவ.முத்து அவர்களுக்குக் காணிக்கையாக்கப் பட்டது. ஒரு நாள், தமிழுலகில் நிகரற்று விளங்கிய, அளப்பரும் பெருமைக் குரிய, சான்றோராகிய ஞா.தேவநேயப் பாவாணர், மிகச் சிறிய என் மனைக்கு எழுந்தருளியிருந்தார். அன்பெனும் பிடிக்குள் |