பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்221

நண்பர் அழகப்பன், 'பெட்டியை நீங்கள் ஏன் எடுத்து வருகிறீர்கள்? அண்ணன் கையிலேயே கொடுத்து விட வேண்டியது தான்?' என்றார். 'அதைத்தூக்கி வரக் கொடுத்து வைக்க வேண்டுமே!' என்று மறுமொழி தந்தார். இஃது என் மேல் அவர் வைத்துள்ள மதிப்புக்கு ஓர் அளவுகோல்.

சில வேளைகளில் நானோ என் மனைவியோ முகம் வாடியிருப் பின் 'ஏன் முகவாட்டத்துடன் இருக்கிறீர்கள்? எதற்கும் கவலைப் படாதீர்கள்; என் உயிர் இருக்கும் வரை உங்களை வாடவிட மாட்டேன்' என்று தெம்பூட்டுவார். இஃது எங்கள் குடும்பத்தில் அவர் வைத்துள்ள பற்றுக்கு எடுத்துக்காட்டு.

இவ்வரலாற்று நூலின் பெரும்பகுதியை அவர் இல்லத் திலிருந்துதான் எழுதினேன். அவ்வமயம் அங்கு வந்திருந்த புலவர் அரச மாணிக்கனார், 'கவிஞர் இங்கிருந்து எழுத நீங்கள் உதவுவது உங்களுக்கு வாய்த்த ஒரு பேறுதான்' என வியந்தார். 'பேறோ கீறோ எனக்குத் தெரியாது நாங்கள் பழகிவிட்டோம் அந்தப் பழக்கத்திற் செய்ய வேண்டியதைச் செய்கிறேன்' என்று மறுமொழி தந்தார் நடராசன், இது நட்பின் ஆழத்தை உணர்த்துகிறது.

அவர் தம் முதல் மகன் பாரதியின் திருமணத்துக்குச் சென்றி ருந்தேன். அப்பொழுது பெண் வீட்டாரை அழைத்து, 'இவர் என் மூத்த மைத்துனர்' என என்னை அறிமுகப்படுத்தினார். இஃது என்பால் வைத்துள்ள உறவு முறையை உறுதிப்படுத்துகிறது.

கொள்கையளவில் நாங்கள் இரு வேறு துருவங்கள். ஆனால் உள்ளத்தால் ஒன்றுபட்டு, நட்பென்னும் உலகில் ஒரே நெறியில் நடந்து கொண்டிருக்கிறோம். மெய்க் காதலுக்கும் உண்மை நட்புக்கும் சாதி எது? மதம் ஏது? கட்சிதான் ஏது?

தம்பி சுப்பிரமணியன்

புதுக்கோட்டை, துணிக்கடையிலிருந்த சீ.ப.சுப்பிரமணியம், நண்பர் ந.இராமலிங்கத்தின் வாயிலாக அறிமுகமானவர், மென்மையான இயல்புடையவர். உரத்துப்பேசவே மாட்டார். என் இயல்பும் அவரியல்பும் ஒரே தன்மையன. உயர் பண்பு களுக்கு உறைவிடமானவர். அதனால் எளிதில் விரைவில் பழகி விட்டோம். உள்ளங்கள் ஒன்றின. அண்ணன் தம்பியாக மாறி விட்டோம்.