பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்233

அமீது, சத்தி

மதுரையில் தமிழாசிரியராகப் பணியாற்றி வரும் புலவர் யூ.கா.அமீது, திருச்சி அரசினர் கல்லூரிப் பேராசிரியர் ந.சத்திவேலு இவ்விருவரும் என் இருகண் போன்றவர்கள். இருவரும் என்பாற் பேரன்புடையராகிப் பெருமதிப்புடன் பழகி என்னை உடன் பிறப்பாகவும் தந்தையாகவும் கருதி வருகின்றனர்.

இவ்விருவரும் என்பாற் கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் வைத்து என் மாணவர்கள் எனப் பல ஆண்டுகள் கருதி வந்தேன். அண்மையில்தான், அவர்கள் என் மாணவரல்லர்; நான் பணி யாற்றிய பள்ளியிற் பயின்றோர் என்னும் உண்மையை உணர்ந்தேன்.

என் துணைவியார், கையில் அடிபட்டு மதுரை மருத்துவ மனையில் இருக்கும் பொழுது அமீது, அவர் துணைவியார், தங்கை, மக்கள் அனைவரும் எனக்கும் என் துணைவியார்க்கும் ஆற்றிய தொண்டுகள் நினைந்து நினைந்து வியக்கத் தக்கன. பெற்ற பிள்ளைகள் கூட மனங்கோணாமல் அப்படிப்பணிபுரியார்.

அமீது என்னை அண்ணன் என்றே அழைப்பார். அவர்தம் மக்கள் பெரியப்பா என்று என் மனங்குளிர வாயார அழைப்பர். நான் மதுரைக்குச் செல்ல நேரின் அங்கே என் வீடொன்று உளது என்ற உரிமையுணர்வுடன் செல்வேன்.

திருச்சிக்குச் சென்றாலும் அப்படியே. சத்திவேலு, என்னை ஐயா என்றுதான் அழைப்பார். அவர் மனைவி கார்த்திகாயினி மாமா என்றும் பிள்ளைகள் தாத்தா என்றும் அழைப்பர். கார்த்திகாயினி என் விருப்பைக் கேட்டறிந்து கொண்டுதான் சமையலே தொடங்குவார்.

என் கண்ணிற் படர்ந்திருந்த படலம் அகல இருமுறை அறுவை மருத்துவம் செய்து கொள்ளத் திருச்சி மருத்துவ மனையில் தங்க நேர்ந்தது. அவ்விரு முறையும் கல்லூரியில் விடுப்பெடுத்துக் கொண்டு என்னுடனேயே தங்கித்தாயினும் சாலப் பரிந்து எனக்கு வேண்டிய உதவிகளைச் சத்திவேலு ஆற்றி வந்தார்.

சில வேளைகளில் வாந்தியெடுத்துவிடுவேன். சிறிதும் அறுவருப் பின்றி அதனைத் தூய்மை செய்து நின்று என் மனத்தைக் கவர்ந்து கொண்டார். அவர் உறங்கும் போது வாந்தி வந்தால் தனியே சென்றுவிடுவேன். உடனே அவர் விழித்துக் கொண்டு ஏன்