பக்கம் எண் :

240கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

பொறிபறக்கும் பேச்சு - இவற்றிற்கு உரியராகத் திகழும் இவரா இவ்வளவு அடக்கமாகப் பேசுகிறார்? பெரியாரிடம் எவ்வளவு ‘பக்தி’ வைத்திருக்கிறார்! என்று வியந்து கொண்டோம்.

கவிஞர், தொடர்ந்து பேசும்பொழுது, ‘நான் முதலில் மயிலம் சுப்பிரமணியரைப் பற்றித்தான் பக்திப் பாடல் பாடிக் கொண்டிருந் தேன். ஒரு பாடல் பாடுகிறேன் கேளுங்கள்’ என்று இசையோடு ஒரு பாடலைப் பாடிக்காட்டினார். பேசும்பொழுது, குரலில் இருந்த கரகரப்பும் கனமும் பாடும் பொழுது காணப் படவில்லை. பிசிரில்லாத மெல்லிய இனிய குரலாக இருந்தது. வேறு யாரோ பாடுவது போலத் தோன்றியது. பாடலைப் பாடி முடித்ததும் ‘இப்படிப் பாடிக் கொண்டிருந்தவன் தான் நான். பின்னர்ச் சுயமரியாதை இயக்கந்தான் என்னை மாற்றிவிட்டது. சமுதாயத்தைப் பாடவைத்தது; பகுத்தறிவுக் கொள்கைகளைப் பாட வைத்தது’ என்று உரையாற்றினார்.

தேவர் மன்றத்தில் கவிஞர் பேசிய பேச்சு, என் கருத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது, கடவுட்பாடல் பாடிக் கொண்டிருந்த என்னை, நாடு, மொழி, இனம் பற்றிப் பாடுமாறு தூண்டியது. அவருடைய தோற்றம், ஒரு வகையான பெருமிதவுணர்வை உண்டாக்கியது. கொள்கையில் விடாப்பிடியான ஓர் உறுதிப் பாட்டை உள்ளத்திற் பதிய வைத்தது.

அதையடுத்து, திருச்சி - தென்னூரில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அளப்பரிய பெருங்கூட்டம்; ஐயா தலைமையிற் மாநாடு தொடங்கியது. அண்ணா, நாவலர், பட்டுக்கேட்டை அழகிரி, நடிகவேள், முதலானோர் கலந்து கொண்டனர். நம் புரட்சிக் கவிஞரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. இடையில் நம் கவிஞர் எழுந்து வெளியில் வந்தார். அருகிற் சென்று அவரைப் பார்த்துவிட வேண்டும் என்று எனக்கோர் ஆர்வம். திரைப்பட நடிகரைக் காண்பதில், இக்கால இளைஞர் களுக்கு எவ்வளவு ஆவலோ அதைவிடப் பன்மடங்கு ஆவல், கவிஞரைக் காண்பதில் எனக்கிருந்தது. அதனால் நானும் எழுந்து அவரைப் பின் தொடர்ந்தேன்.

பந்தலுக்கு வெளியே வந்து நின்றார். வேறு சிலரும் உடன் நின்றனர். கட்டம் போட்ட கோட்டுப் பைக்குள் கையைவிட்டு வெளியே எடுத்தார். தீப்பெட்டியும் வெண்சுருட்டும் கையில்