| பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 27 |
எழுத்து வடிவம் அழகாக அமையவும் ஒலி வடிவத்தைப் பிழையின்றி ஒலிக்கவும் மாணவர்க்குப் பயிற்சி தருவதில் அவர் காட்டிய அக்கறை நினைந்து நினைந்து மகிழத்தக்கது. மணலில் மாணவர் எழுதும் பொழுது, வடிவம் கோணலாக அமைந்து விட்டால். சீறியெழுந்து, விரல்களுக்கிடையே இருக்கும் பொடியை வேகமாக உறிஞ்சிவிட்டு, ஐந்து விரல்களையும் விரித்துக் கொண்டு ‘டெலே’ யென்று கத்திய வண்ணம் முதுகில் ஓரடி கொடுப்பார். எழுத்து, சரியாக நிமிர்ந்து கொள்ளும். எனக்கு அப்பேறு பல முறை கிடைத்த துண்டு. எழுதுதல், ஒப்பித்தல், பார்த்துப் படித்தல் எல்லாம் முடிந்த பிறகு எங்களைத் தரையில் அமரச் செய்து, பெரியபுராணம், திருவிளை யாடல் முதலிய நூல்களிலிருந்து கதைகள் கூறி இடையிடையே பாடல்களும் சொல்லி விளக்குவார். பாடல் சொல்லும் பொழுது மெய்ப்பாடு தோன்ற உருகி உருகிச் சொல்லுவார். நாங்களும் கேட்டு உருகுவோம். ஆறேழு பக்கம் கதை, கட்டுரை எழுதித் தந்து, மனப்பாடம் செய்யச் சொல்லிப் பயிற்சி தந்து, ஆவணி மூலத்திரு நாளில் கோவில் வாயிலில் கூட்டங் கூட்டுவித்து, இரண்டு, மூன்றாம் வகுப்பிற் பயிலும் மாணவர் களைப் பேசச் செய்து மகிழ்வார். நானும் இரண்டு மூன்று முறை அவ்வாறு பேசியிருக் கிறேன். நிகண்டும் அப்பொழுதே மனப்பாடம் செய்யச் சொல்வார். அப்பெருந்தகை, ஈடுபாட்டுடன் ஊட்டிய இலக்கிய வுணர்வு என் கவிதையுணர்வு என்ற வேலைக் கூர்மைப் படுத்தியது எனலாம். ஆசிரியர் பாராட்டு நாற்பதாண்டுகளுக்குப் பின் நான் ஆசிரியரான பின் ஒரு நாள் மேலைச்சிவபுரித் தமிழ்க் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். கல்லூரி முதல்வர் என்னை வரவேற்று, இருக்கையில் அமருமாறு கூறினார். அருகில் என் ஆசிரியர் வேங்கடராமையர் இருந்தமை யால் இருக்கையில் அமர நான் தயங்கினேன். அதனைக் கண்டு ‘சும்மா, உட்காரப்பா’ என்று கையைப் பிடித்து அமரச்செய்தார் என் ஆசிரியர். அமர்ந்த பின்னரும் ஆசிரியர் அருகில் இருப்பதால் என் நடுக்கம் ஓயவில்லை. அவ்வளவு மதிப்பும் மரியாதையும் ஆசிரியர்கள்பாற் கொண்டிருந்தோம். |