பக்கம் எண் :

282கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

திடுக்கிட்டுப் போனேன். மக்களுக்காக மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட துயர்ப்பட்ட ஒரு தலைவரைப் பிறர் பாராட்டிப் பாடக் கூடாது; அம்மதத்தவரே பாட வேண்டுமென்றால் அது மதப்பற்றா? மத வெறியா? மனத்தைப் பற்றிய பேதைமை நெறியா? ஒன்றும் விளங்கவில்லை. மதம் எக்காலத்தும் மனிதனைப் பிரித்து வைக்குமே தவிர, ஒன்றுபடுத்த உதவாது என்பதுதான் உறுதியாகிறது.

தமிழைத் தமிழன்தான் பாராட்ட வேண்டுமா, ஆங்கிலத்தை ஆங்கிலேயர்தான் பாராட்ட வேண்டுமா? மற்றவன் பாராட் டினால் குற்றமா? ஒரு மதத்தை அம்மதத்தவன்தான் பாராட்ட வேண்டுமா? பிறன் பாராட்டுவது குற்றமா? என்னே பேதைமை!’

அமைச்சரும் அரசரும்

சென்னையில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் தலைவர். அக்கவியரங்கில் நானும் பாடினேன்.

நான் எழுந்து, முதற்பாடலில் ‘நற்றலைவர் ஓர் அமைச்சர், நானோ இந்த நாடறிந்த முடியரசன்’ என்று கூறியதும் கொட்டகையே அதிர்ந்துவிட்டது. சட்டப் பேரவைத் துணைத் தலைவராக இருந்த கணபதி அவர்கள் இன்றும் என்னைக் காணின், அவ்வரிகளைச் சொல்லிப் பாராட்டுவார். இது குடியாட்சிக் காலமாதலின், அரசர் அமைச்சர் என்ற வேறுபாடில்லை என்பதை உணர்த்தவே பாடுகிறேன் என்று பாடினேன்.

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்’
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

என்று மேடைதோறும் முழங்கு முழங்கென்று முழங்கி வந்த தி.மு.க. நண்பர் சிலர்,அமைச்சரானவுடன், இலக்கிய விழாக் களுக்கு அழைத்தால் வருவதில்லை. ‘என்ன ஐயா இலக்கியக் கூட்டம்?’ என்று சலிப்பாகவும் பேசிவந்தனர். அச்செய்தி எனக்கு வேதனையாக இருந்தது.

இவ்வேதனையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பென்றெண்ணி, தமிழால் கழகம் வளர்ந்தது. கழகத்தால் தமிழ் வளர்ந்தது. ஒன்றை யொன்று மறந்தால், புறக்கணித்தால் எதுவும் வளர வழியில்லை என்னும் பொருள் படப் பாடினேன். அவையி லிருந்த பேராசிரியர்