பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 285 |
அண்ணா! நினக்கு அண்ணாதுரை எனப் பெயர் சூட்டிய வாயை வாழ்த்துகிறேன். அப்பெயர் சூட்டிமையாலன்றோ நாங்கள் அண்ணா அண்ணா என அழைக்கின்றோம். துரையென்றால் அரசன் எனப் பொருளுண்டு. நீ அரசன்தான், ‘திராவிட நாடு’ உன்னுடையது. எழுதுகோலே செங்கோல். தமிழர் நெஞ்சமே அரியணை. நெடுஞ்செழியன், சிற்றரசு, தென்னரசு, முடியரசன் உனக்குக்கப்பம் கட்டும் சிற்றரசர். உன் எழுத்தெல்லாம் நின் ஆணைகள் எனக்கூறும் வரை அமைதி யாக இருந்த அண்ணா, ‘பட்டத்து ராணி உண்டு’ என்று கூறியதும் நாவைக் கடித்துத் கொண்டு நாணித் தலை குனிந்தார் (அண்ணாவின் துணைவியார் பெயர் ராணி என்பதாகும்) அண்ணாவைப் புகழ்ந்தால் தாங்கிக் கொள்ளமாட்டார். ஐயாவைப் புகழ்ந்தால் வாங்கிக் கொள்ள மாட்டார். லால்குடியார் மயக்கம் திருமலைராயன் பட்டினத்திற் கம்பர் விழா. தலைவர் பேராசிரியர் அ.சீனிவாச ராகவன். ‘கம்பன் இன்றிருந்தால்’ என்னும் பொதுத் தலைப்பில் ‘வெம்புவான்’ என்ற தலைப்பில் நான் பாட அழைக்கப் பட்டேன். வழக்கபோல் என் கருத்திற் கேற்ப ஏன் வெம்புவான்; எவற்றைக் கண்டு வெம்புவான் என்னும்; முறையிற் பாடினேன். கேட்டுக் கொண்டிருந்த லால்குடி நடேச முதலியாரவர்கள் துள்ளியோடி வந்து என்னை அப்படியே மார்போடு அணைத்துத் தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்துவிட்டார். இறுக அணைத்துத் தூக்கியதால் அவர்க்குத் தொந்தி வலித்ததோ, இல்லையோ எனக்கு வலிக்கத் தொடங்கி விட்டது. அவர் முதியவர், நான் காளைப் பருவத்தினன். என்னைத் தூக்கிக் கொண்டு ஆடுவதென்றால், என் பாடலில் எவ்வளவு மயங்கியிருக்க வேண்டும்? கவி வெறி, கள் வெறி போன்றது என்பான் பாரதி. அவ்வெறிதான் அம் முதுபெரும் புலவரை ஆட வைத்திருக்கிறது. என் கவிதைகளுக்கு உரிய பாராட்டு, நாடு வழங்க மறுப்பினும் இத்தகு முது பெரும் புலவர்கள் தம் உளங்கனிந்த பாராட்டும் கிடைத்ததே! அது போதும். |