பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்69

தமிழ்ப் பெயர்கள் மட்டும் ஏற்றதாகாவோ? என்று நான் உரைத்தேன். வாயடங்கினார்.

வடமொழியில் எவ்வளவு இழிவான பொருள் தரும் பெயர் களாயினும் தலை வணங்கிச் சூட்டிக் கொள்கின்றனர். தமிழ் என்றால் அவர்களுக்குக் கசக்கிறது. அஃது அவர்கள்மேற் குற்றமன்று. பிறமொழிகளில் ஊறிப்போன அடிமை மனம் உடையராதலின் பேதைமையால் அவ்வாறு பிதற்றுவாராயினர். இதனாலேதான் ‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்று பாரதியார் வேதனைப்படுகிறார்.

‘கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி’ என்ற தலைப்பிற் கதை ஒன்று எழுதிப் ‘போர் வாள்’ இதழில் வெளியிட்டேன். பேராசிரியர் பலராற் பாராட்டப்பட்டது. கற்பனை, எழுதப் பட்டுள்ள முறை, நடை ஒவ்வொன்றையுஞ் சுட்டிக் காட்டித் தாத்தா மிகுதியும் பாராட்டினார். மேலும் மேலும் எழுதத் தூண்டினார்.

இக்கதை வெளிவந்தது முதல், ‘போர்வாள்’ ஆசிரியர் மா.இளஞ்செழியன் என்னைக் கண்டாற்போதும்; கதை வேண்டு மென்று வற்புறுத்துவார். அவரைக்கண்டால் நான் மறைந்து கொள்வது
முண்டு. கவிதை எழுதுவது எனக்கு எளிது; கதை யெழுதுவது பெருந்தொல்லை. நீண்ட நேரம் இருந்து எழுத வேண்டு மல்லவா? எனினும் அடிக்கடி போர்வாள் இதழில் எழுதிவந்தேன்.

கூண்டோடு சிறை

தில்லியில் பொது ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) இருந்த சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார், சென்னைக்கு வருகை தருவதை எதிர்க்கும் பொருட்டுத் திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அரசு, அங்கேயே அனைவரையும் சிறை செய்து விட்டது, சிறை செய்யப் பட்டதைக் கண்டிக்கும் வகையில், தீவுத்திடலில், தமிழ்ப் பெரியார் திரு.வி.க. தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

நான், அழகுவேலண்ணன், திருமாவளவன் மூவரும் கருப்புச் சட்டையுடன் மேடையேறினோம். சிறை செய்யப்படாமை யால் வெளியிலிருந்த பேராசிரியர் க.அன்பழகன், குஞ்சிதம்