பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்85

பயணச்சீட்டை வாங்கிப் பார்த்து, ‘நீங்கள் காடு லைன் வழி செல்லும் எக்சுபிரசுக்கு டிக்கெட் வாங்கியிருக்கிறீர்கள். இது மெயின் லைனில் செல்லும் பாசஞ்சர் வண்டி’ என்றார்.

அப்பொழுதுதான் வண்டி மாறியநிலை தெரிந்தது. அண்ணனைப் பிரியும் வேதனைக் குழப்பம் இப்படி மாற்றி விட்டது. பின் தஞ்சையில் இறங்கி மேலைச் சிவபுரி வந்து சேர்ந்தோம்.

வேலை தேடும் படலம்

சென்னையிலிருந்து விலகி வந்ததும் வேலை கிடைக்காமல் எட்டுத் திங்கள் ஊர் ஊராக அலைந்தேன். பெரியகுளம் மீ.சு.இளமுருகனார் என் வேலைக்காகப் பெருமுயற்சி யெடுத்துக் கொண்டார். தம் கைப்பொருளைச் செலவிட்டு அவரும் அலைந்தார்.

வேலையின்றிப் பெரியகுளத்தில் என் தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்த நாளெல்லாம் பா.கு.இராமசாமி, இலக்கணன் என்ற நண்பர்கள் புரிந்த உதவிகள் என்றும் நினைவு கூரத்தக்கன. வேலை யின்மையால் வேதனை எய்தி ஐந்நூறு உரூவா கொடுங்கள், பெட்டிக் கடை வைத்துப் பிழைத்துக் கொள்கிறேன் என்று பா.கு.இராமசாமி யிடம் வேண்டினேன். ‘அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்; வேலை கிடைக்கும் வரை குடும்பத் துடன் என் வீட்டில் தங்குங்கள்; வேண்டிய உதவிகளை யெல்லாம் நான் செய்கிறேன்’ என்று அன்பு படர மொழிந்தார்.

கடைசியில் மி,சு.இளமுருகனார் பெரு முயற்சியால் பெரிய குளத்திலேயே மாவட்டக்கழகப் (டிஸ்ட்ரிக்போர்டு) பள்ளியில் வேலை கிடைத்தது. ஆணையில் 45உரூவா சம்பளம் குறிக்கப் பட்டிருந்தது. நேரிற் சென்று, சென்னையில் 64 உரூவா வாங்கிக் கொண்டிருந்தேன்; இவ்வாணையில் 45 என்றிருக்கிறது. சம்பளத்தை மிகுதிப்படுத்துமாறு வேண்டினேன் ‘தவறுதலாகத் தட்டச்சு செய்யப்பட்டுவிட்டது’ என்றார் தலைமையாசிரியர். எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்றேன். ‘நாற்பதுதான் உங்களுக்குரிய சம்பளம்’ என்றதும் வேலை வேண்டாமென வந்து விட்டேன்.

அழகின் சிரிப்பு

மணப்பாறைக்கு அருகிலுள்ள மறவனூரில் சுப.சண்முக சுந்தரம் என்ற நண்பர் இல்லத்திற் சில நாள் தங்கினேன். அப்பொழுது