பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு119

சிற்றரசனாக வாழ்ந்திருந்திருக்க முடியாது. அவன், களப்பிரர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு சோழர்கள் சுதந்தரர்களாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் தான் வாழ்ந்திருக்க வேண்டும். கடைச்சங்க காலத்துக்குப் பிறகு (கி.பி. 250க்குப் பிறகு) சோழ நாடு களப்பிரர் ஆட்சிக்குக் கீழடங்கியிருந்தது. ஏறத்தாழ கி. பி. 575இல் பல்லவ சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து வென்று கைப் பற்றினான். பிறகு, சோழ நாடு கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர் ஆட்சிக்குப்பட்டிருந்தது. கி.பி 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சோழர்கள் மறுபடியும் சுதந்திரம் பெற்றுப் பேரரசர்களாக அரசாண்டார்கள். ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரையில் சோழர்கள் களப்பிரருக்கும் பின்னர் பல்லவருக்கும் கீழடங்கிச் சிற்றரசர்களாக இருந்த காலத்தில் சோழன் செங்கணான் இருந்திருக்கமுடியாது. செங்கணான், களப்பிரர் சோழ நாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்னரே கி.பி. 250க்கு முன்பு இருந்தவனாதல் வேண்டும்.

பள்ளன்கோவில் செப்பேடு கூறுகிறபடி, பல்லவ சிம்மவிஷ்ணு வென்ற சோழ நாட்டுச் சிம்ம விஷ்ணு களப்பிர அரசன் என்பது சரித்திர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ள உண்மையாகும். சரித்திரக் காரர்களின் இந்த முடிவுடன் மகாலிங்கம் புதிதாகக் கற்பனையாகவும் ஊகமாகவும் கூறுகிற செய்தி முரண்படுகிறது.

பொய்கையாரைப் பொய்கையாழ்வாருடன் இணைத்துக் குழப்புவதும், பிறகு பொய்கையார் களவழியில் பாடிய செங்கணானைக் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று இணைத்துக் குழப்புவதும். பிறகு அந்தச் செங்கணானைப் பல்லவ சிம்மவிஷ்ணுவின் சம காலத்தவன் என்று ஊகிப்பதும், பிறகு செங்கணானைச் சோழ நாட்டில் அரசாண்ட சிம்மவிஷ்ணுவுடன் (களப்பிர அரசனுடன்) இணைத்துக் குழப்புவதும் உண்மையான சரித்திரத்துக்கு உகந்ததன்று. முதற் கோணல் முற்றுங்கோணல் என்னும் பழமொழி போல, பொய்கையாழ் வாரில் தொடங்கிய தவறு பல தவறுகளில் வந்து முடிந்தது.

எனவே, நாம் தொடக்கத்தில் கூறியதுபோல, சோழன் செங்கணானும் அவன் வென்ற கணைக்கால் இரும்பொறையும் அவர்கள் காலத்தி லிருந்த பொய்கையாரும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தார்கள் என்பதே சரியாகும்.