26 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
கொங்கு நாடு இப்போது சேலம் வட்டம், கோயம்புத்தூர் வட்டங்களில் அடங்கியிருப்பதாகக் கூறுவர். பிற்காலத்திலே சுருங்கிப்போன கொங்கு நாட்டைத்தான் அதாவது கோயம்புத்தூர் சேலம் வட்டங்களைத்தான், இக்காலத்தில் கொங்கு நாடு என்று கூறுகின்றோம். ஆனால், சங்க காலத்திலிருந்த கொங்கு நாடு இப்போதுள்ள கொங்கு நாட்டைவிட மிகப் பெரியதாக இருந்தது. பிற்காலத்துச் செய்யுள்கள் கொங்கு நாட்டின் எல்லையைக் குறுக்கிக் கூறுகின்றன. “வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்குக் குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று - கிழக்குக் கழித்தண்டலை சூழும் காவிரிசூழ் நாடா குழித்தண் டலையளவே கொங்கு” என்றும்; “வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்குக் குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும் களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாட்டுக் குளித்தண் டலையளவே கொங்கு” என்றும் கூறுகின்றன பழம் பாடல்கள். கொங்கு மண்டல சதகம் கொங்கு நாட்டின் எல்லைகளை இவ்வாறு கூறுகிறது. “மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக் கதித்துள வெள்ளிமலை பெரும்பாலை கவின்வடக்கு விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்றும் மேவிவிண்ணோர் மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே” இவ்வாறு கூறுவன எல்லாம் பிற்காலத்து எல்லைகள். ஆனால், மிக முற்காலத்திலே, கடைச்சங்க காலத்தில் கொங்கு நாடு பரந்து விரிவாக இருந்தது. அதன் தெற்கு எல்லைக்கு அப்பால் பாண்டி நாடு இருந்தது. அதன் மேற்கு எல்லை, சையகிரி (மேற்குத் தொடர்ச்சி) மலைகள். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கே சேரநாடும் துளுநாடும் இருந்தன. கொங்கு நாட்டின் கிழக்கு எல்லைக்கப்பால் சோழநாடும் தொண்டை |