பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 277 |
திருநீலநக்கர் சோழநாட்டுச் சாத்தமங்கை என்னும் ஊரில் இருந்தவர். திருஞானசம்பந்தரிடம் மிகுந்த அன்புள்ள நண்பர். திருஞான சம்பந்தருக்குத் திருமணம் நடந்தபோது இவர் புரோகிதராக இருந்தார். பிறகு, அத் திருமணத்தின் போது திருஞானசம்பந்தருடன் சோதியில் கலந்தார். இவர் வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணம் திருநீல நக்க நாயனார் புராணத்தில் காண்க. சிறுத்தொண்டர் இவருக்குப் பரஞ்சோதியார் என்றும் பெயர் உண்டு, சோழ நாட்டுத் திருச்செங்காட்டங்குடியில் இருந்தவர். பல்லவ அரசனிடம் (மாமல்லன் நரசிம்மவர்மனிடம்) சேனைத்தலைவராக இருந்தவர். அவ்வரசன் கட்டளைப்படி வாதாபி (வாதாபி) என்னும் நகரத்தின்மேல் படையெடுத்துச்சென்று அந்நகரை (கி. பி. 642-இல்) வென்றார். பிறகு சேனைத்தலைவர் பதவியிலிருந்து நீங்கிக் கணபதீச்சரத்துச் சிவன் கோயிலில் திருத்தொண்டு செய்துகொண்டிருந்தார். அப்போது சீராளன் என்னும் மகன் இவருக்குப் பிறந்தான். இவர் திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர் முதலிய நாயன்மாருடன் நண்பராக இருந்தார். இவர் திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருமணத்திற்கு முன்பே இறைவன் அடியைச் சேர்ந்தார். இவருடைய விரிவான வரலாற்றைப் பெரிய புராணம் சிறுத்தொண்ட நாயனார் புராணத்தில் காண்க. பாண்டிமா தேவியார் இவருக்கு மங்கையர்க்கரசியார் என்னும் பெயர் உண்டு. சோழ அரசனுடைய மகளார். இவருடைய தந்தையான சோழ அரசன், பல்லவ அரசனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாக இருந்தவன். பாண்டியன் நெடுமாறனுக்கு வாழ்க்கைப்பட்ட மங்கையர்க்கரசியார், சைவ சமயப் பற்றுடையவர். திருஞானசம்பந்தரைப் பாண்டி நாட்டிற்கு அழைத்துப் பாண்டியனைச் சைவனாக்கிப் பாண்டி நாட்டில் சைவமதத்தைத் தழைக்கச் செய்வதற்கு முதற் காரணமாக இருந்தவர். திருநாவுக்கரசர் பாண்டிநாட்டில் தலயாத்திரை செய்தபோது அவரை வரவேற்று உபசரித்தார். இவரது வரலாற்றினைப் பெரியபுராணத்தில் காண்க. |