பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 297 |
“கலை நிலவிய புலவர்களிடர் களைதரு கொடை பயில்பவர் மிகு சிலைமலி மதில்புடை தழுவிய பொழில் வளர்தரு மிழலையே.”1 என்றும், “உரவார் கலையின் கவிதைப் புலவர்க் கொருநாளும் கரவா வண்கைக் கற்றவர் சேருங் கலிக்காழி.”2 என்றும், “வையம் விலைமாறிடினும் ஏறும்புகழ் மிக்கு இழிவிலாத வகையார் வெய்ய மொழிதான் புலவருக்கு உரை செய்யாதவர் வேதி குடியே.”3 என்றும் அவர் கூறியிருப்பது காண்க. சிவபெருமான் மதுரையில் தொகை நூலைத் தொகுத்தார் என்னும் கதையை ஞானசம்பந்தர் கூறுகிறார்: “அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந் தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர் பற்றின்றிப் பாங்கெதிர் விரவும் பண்பு நோக்கிற் பெற்றன் றுயர்ந்த பெருமான் பெருமானு மன்றே”4 இப் பாட்டுக்கு உரை கூறுவதுபோல, சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் இவ்வாறு பாடியுள்ளார்: “ஆன அற்றன்றி என்ற அத்திருப்பாட்டிற் கூடல் மாநகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத்தேறா ஈனர்கள் எல்லைக்கிட்ட எடுநீர் எதிர்ந்து செல்லில் ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.”5 நாவுக்கரசர் கூறுவதையும் இதனுடன் ஒத்திட்டுப் பார்ப்போம். “மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க விழுமியநூல் ஆய்ந்தான் அடிநிழற் கீழதன் றோவென் னாருயிரே.”6 |