பக்கம் எண் :

204மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3

முதற்போர்

களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், தன்னுடைய உறவினனும் சேனைத் தலைவனும் ஆகிய வெளியன் வேண்மான் ஆய்எயினன் என்பவன் தலைமையில் தன் சேனையைத் துளு நாட்டின் மேல் போர் செய்ய அனுப்பினான். வெளியன் வேண்மான் ஆய்எயினன் நன்னன் மேல் படையெடுத்துச் சென்றான். அவனை நன்னனுடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் பாழி என்னும் இடத்தில் எதிர்த்தான். கடுமையாக நடந்த அந்தப் போரில் ஆய்எயினன் இறந்து
போனான். அதனால், சேரன் தோல்வியடைந்தான். இதனை,

பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென
யாழிசை மறுகிற் பாழி யாங்கண்
அஞ்ச லென்ற ஆஅய் எயினன்
இகலடு கற்பின் மிஞிலியோடு தாக்கித்
தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது

(அகம்396: 2-6)

என்பதனாலும்,

வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவிற் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென                          (அகம் 208:5-9)

என்பதனாலும்,

ஒன்னார்
ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை
அடுபோர் மிஞிலி செருவேல் கடைஇ
முருகுறழ் முன்பொடு பொருதுகளஞ் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்தென (அகம் 181: 3-7)

என்பதனாலும்,

கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருதுகளம் பட்டென                          (அகம்148: 7-8)

என்பதனாலும் அறிகிறோம்.