| 134 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
அரிசில் கிழாரும் அங்குக் கிடைத்த திருமணியைக் கூறு கின்றார். உழவர் ஏர் உழுத பொழுது அந்த மணிகள் வெளிப் பட்டனவாம். ‘கருவி வானந் தண்டளி சொரிந்தெனாப் பல்விதை யுழவர் சில்லே ராளர் பனித்துறைப் பகன்றறைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம் அகன்கண் வைப்பின் நாடு’ (8ஆம் பத்து, 6 : 10-15) கொங்கு நாடு, சங்க காலத்தில், வடக்கே மைசூர் வரையில் இருந்தது. கன்னட நாட்டில் பாய்கிற காவிரியாறு வரையில் கொங்கு நாடு அக் காலத்தில் பரவியிருக்கிறது. அந்த வடகொங்கு நாட்டிலே புன்னாடு என்னும் ஒரு பகுதியில் அக்காலத்தில் கோமேதகச் சுரங்கம் இருந்தது. புன்னாட்டின் தலைநகரம் கட்டூர். அது கப்பணி ஆற்றின் கரை மேல் இருந்தது. கப்பணி ஆறு, காவிரியில் கலக்கிற உபநதிகளில் ஒன்று. கப்பணி ஆற்றின் கரைமேல் இருந்த கட்டூர் பிற்காலத்தில் கிட்டூர் என்று வழங்கப்பட்டது. அது பிற்காலத்தில் கிட்டிபுரம் என்றும் பிறகு தீர்த்திபுரம் என்றும் வழங்கப்பட்டது. கட்டூர் அல்லது கிட்டூரைத் தலைநகரமாகக் கொண்ட புன்னாட்டை அக்காலத்தில் குறுநில மன்னன் ஆண்டு வந்தான். நவமணிகளில் கோமேதகம் என்பது ஒருவகை. கோமேதங்களில் பல வகையுண்டு. நீலம், பச்சை, மஞ்சள், பழுப்பு நிறம் முதலான வகைகள் கோமேதகத்தில் உண்டு. இவைகளில் நீல நிறமான கோமேதகத்தை உரோமர் ஆக்வாமரினான் (Aqua Marine) என்று கூறினார்கள். அந்த நீலக்கல் கடல் நீர் போன்ற நிறம் உள்ளது. அது அக்காலத்தில் புன்னாட்டைத் தவிர வேறெங்கும் கிடைக்க வில்லை. 
|