156 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி வெறிகமழ் நெடுவேள் நல்குவ னெனினே செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யானுயிர் வாழ்தல் அதனினு மரிதே. குறுந்தொகை 277 ஆம் செய்யுளிலும் அறிவர் கூறப்படுகிறார். ஆசில் தெருவின் ஆசில் வியன்கடை செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது ஓரிற் பிச்சை ஆர மாந்தி அற்சிரை வெய்ய வெப்பத் தெண்ணீர் சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே மின்னிடை நடுங்குங் கடைப்பெயல் வாடை எக்கால் வருவர் என்றி அக்கால் வருவரெங் காத லோரே. தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியதைக் கூறுகிறது இச்செய்யுள். கார்காலத்தின் இறுதியில் திரும்பி வருவதாகச் சொல்லித் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான் தலைமகன். அவன் சொன்ன கார்காலத்தின் இறுதியை அறிவதற்காகத் தோழி அறிவனைக் கண்டு கேட்கிறாள். இச்செய்யுளில் அறிவன் என்னும்சொல் ஆளப்படவில்லை. செய்யுள் அடிக் குறிப்பிலிருந்து அறிவன் என்பது தெரிகிறது. அறிவன் நன்கு மதிக்கப்பட்டவன் என்பதும் வீடுதோறும் பிச்சை ஏற்று உண்ணாமல் ஒரே வீட்டில் உணவு கொண்டான் (ஓரிற்பிச்சை ஆர மாந்தி) என்பதும், அவன் வைத்திருந்த சேமச்செப்பில் வெந்நீர் அருந்தினான் என்பதும் காலத்தைக் கணித்துக் கூறினான் என்பதும் அறியப்படுகின்றன. ஆனால் இவன் துறவியல்லன்; இல்லறத்தானே. பிற்காலத்து நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலையில் அரசமுல்லை, அரசவாகை, பார்ப்பன முல்லை, பார்ப்பன வாகை கூறப்படுவதுபோலவே கணிவன் முல்லை, அறிவன் வாகை கூறப்படுகின்றன. இதில் கணிவனும் அறிவனும் ஒருவரே என்பது தெரிகின்றது. |