பக்கம் எண் :

34மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

உகா மரத்தின் பழம் போல மஞ்சள் நிறமாகப் பொற்காசுகள் இருந்ததைக் காவன் முல்லைப் பூதனார் கூறுகிறார்.

‘குயில்கண் அன்ன குரூஉக் காய்முற்றி
மணிக்கா சன்ன மானிற இருங்கனி
உகாஅ மென்சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ்சுரம்’

(அகம், 293: 6-9)

(குரூஉ - குரு = நிறம். காசு அன்ன - காசு போன்ற. உகா - உகா மரம். சினை - கிளை)

பொற்காசுகளை மாலையாகச் செய்து மகளிர் அறையைச் சுற்றி (மேகலை போல) அணிந்துகொண்டதைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் கூறுகிறார்).

‘ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்’                    (புறம், 353: 1-2)

காசுகளை மாலையாகச் செய்து அரையில் அணிந்திருந்த பெண் ஒருத்தியை மதுரைப் போத்தனார் கூறுகிறார்.

‘அம்மா மேனி ஐதமை நுசுப்பில்
பல்காசு நிரைத்த கோடேந் தல்குல்
மெல்லியல் குறுமகள்.’

(அகம் 75: 18-20)

(ஐது - அழகிய, நுசுப்பு - இடுப்பு, இடை, குறுமகள் - இளம்பெண்)

காசுமாலை அணிந்த இன்னொரு பெண்ணை ஓதலாந்தை யார் கூறுகிறார்.

‘பொலம் பசும் பாண்டில் காசு நிறை அல்குல்
இலங்குவளை மென்றோள்.’

(ஐங்குறு, பாலை, செலவழுங்குவித்த பத்து 10)

களங்காய்க் கண்ணி, நார்முடிச் சேரலைப் பாடிய காப்பி யாற்றுக் காப்பியனார்க்கு 40 நூறாயிரம் பொன் (நான்கு) இலட்சம் அவன் பரிசாகக் கொடுத்தான் என்று கூறப்படுகிறது (பதிற்றுப் பத்து நான்காம் பத்து, பதிகம்) இங்குப் பொன் என்பது பொற்காசு என்று தோன்றுகிறது. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் மேல் 6ஆம் பத்துப் பாடிய காக்கைப் பாடினியார் நச்செள்ளை யார்க்கு அவ்வரசன், நகை செய்து அணிவதற் காக ஒன்பது காப்பொன்னையும் நூறாயிரம் காணமும் (காணம் - அக்