| பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் | 101 |
முன் கல்வெட்டை ஆராய்ந்த அறிஞர்கள் இந்தக் கல்வெட்டை ஆராயவில்லை. எச்.கிருட்டிண சாத்திரியும், கே.வி. சுப்பிரமணிய அய்யரும், சி. நாராயணராவும், டி.வி. மகாலிங்கமும் இந்தக் கல்வெட்டைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை. இந்தக் கல்வெட்டு இருக்கிறது என்றுகூட அவர்கள் குறிப்பிடவில்லை. முன் கல்வெட் டெழுத்துப் போன்றே இந்தக் கல்வெட்டும் பாண்டியர் வரலாற்றுக்கு மிக முக்கியமானது. திரு. ஐ. மகாதேவன் இந்தக் கல்வெட்டைப்பற்றி எழுதியுள்ளார். அவர் இந்தப் பிராமி எழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார்:13 “காணிய் நாந்தா அஸிரிய் ஈகுவ அன்கே தம்மாம் ஈத்தா நெடுஞ்சாழியான் பானா அன் காடால அன் வாழுத்திய் கொட்டு பித்தா அ பர்ஸிஇய்” திரு.ஐ. மகாதேவன் இதை இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்: ‘கணிய்’ நந்தா ஆஸிரிய்கு உவன் தம்மன் ஈத்தா நெடுஞ்சழியன் பணவன் கடலன் வழுத்திய் கொட்டுபித்த பளிஇய்’ இதற்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்: ‘அங்கு (உவன்) வசிக்கிற கணியன் நந்தா ஸிரியற்குத் தருமம். நெடுஞ்செழியனி பணயன் (ஊழியன்) ஆன கடலன் வழுத்தி இந்தப் பள்ளியைக் கொடுப்பித்தான்’ (இவர் இதையே இன்னொரு வகையாகவும் படிக்கிறார்) ‘அங்கே வசிக்கிற கணி நந்தாஸிரியற்கு கொடுக்கப்பட்டது. நெடுஞ்செழியன் பணவன் (பஞ்சவன்) கடலன் வழுதி இந்தப் பள்ளியைக் கொடுப்பித்தான்’. (இதற்கு இவர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்) .பண’ என்பது ‘பஞ்ச’ என்பதன் திரிபு. பணவன் என்பது பஞ்சவன் என்னும் பொருளுள்ளது. பஞ்சவன் என்பது பாண்டியர்களுக்குப் பெயர். கடலன் என்பதும் பாண்டியனுடைய பெயர். கடல்களுக்குத் தலைவன் என்பது இதன் பொருள். கடலன் என்பதைக் |