பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் | 151 |
விடுபட்டிருக்கிறது. தவறாக எழுதப்பட்டுள்ள இந்தச் சொல்லை அதிட்டாடனம் என்று திருத்திப் படிக்க வேண்டும். சித்தன்னவாசல் பிராமிக் கல்வெட்டிலும் இந்தச் சொல், அதிடஅனம் என்று எழுதப்பட்டிருக்கிறது. (சித்தன்னவாசல் பிராமி எழுத்து காண்க.) ஆனால் புகழியூர் கல்வெட்டில் இந்தச் சொல் அதிட்டானம் என்று சரியாக எழுதப்பட்டிருக்கிறது. அதிட்டானம் என்பது தமிழ்ச் சொல் அன்று. அது பிராகிருத மொழியாகவோ அல்லது சமற்கிருத மொழியாகவோ இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதிட்டானம் என்பது இருக்கை நிலை என்னும் பொருள் உள்ளது போலத் தோன்றுகிறது. பனைதுறை என்னும் ஊரினரான வெஸன் என்பவர் முனிவர்களுக்காக இந்தக் கற்படுக்கைகளை அமைத்தார் என்பது இந்தக் கல்வெட்டின் கருத்து. அடிக்குறிப்புகள் 1. அப்பர் தேவாரம்: இரண்டாம் திருமுறை - திருவாட்போக்கி தேவாரம். 2. ‘கொங்கு’ 15, 8. 73, தேனடை 3. தேனீ 8, பக். 201-203. |