பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் | 181 |
மாயிரு முள்ளூர் மன்னர் மாவூர்ந்து எல்லித் தரீஇய இனநிரை (நற்றிணை-291-7-8) சேரன் செங்குட்டுவனுடைய தம்பியாக ஆடுகோட்பாட்டுச் சேர லாதன், தண்டாரணிய நாட்டில் (விந்திய மலைப்பிரதேசத்தில்) சென்று பகைவருடைய பசுக்களைக் கவர்ந்து கொண்டு சேரநாட்டுத் தொண்டிப்பட்டினத்தில் கொண்டு வந்து பலருக்குக் கொடுத்தான் என்று பதிற்றுப்பத்தில் 6-ஆம் பத்தும் பதிகம் கூறுகிறது. பகைவர் கொண்டு போன ஆனிரைகளை மீட்பதற்காக நடந்த கரந்தைப் போரில் ஒரு வீரன் போர் செய்து ஆனிரைகளை மீட்டான். ஆனால், அவன் வெற்றியடைந்த போதிலும் அவன் பகைவரின் அம்புகளினால் இறந்து போனான். இதை ஒக்கூர் மாசாத்தியார் கூறுகிறார். கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமே மேனாளுற்ற செருவிற்கு இவள்தன் ஐ யானை யெறிந்து களத் தொழிந்தனனே நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டு பட்டனனே. இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித் துடீஇப் பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே (புறம் 279) வெட்சி வீரர் கவர்ந்து கொண்டுபோன ஆனிரைகளை மீட்பதற் காகக் கரந்தை வீரர் செய்யும் போர் கடுமையானது. ஆனிரைகளைக் கவர்ந்து கொண்ட வெட்சி வீரர் எளிதில் ஆனிரைகளை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். கடுமையாகப் போர் செய்து கரந்தை வீரர்களைக் கொல்வார்கள். வெட்சி வீரரிடமிருந்து ஆனிரைகளை மீட்கும் கரந்தை வீரர், கடலுக்குள் புகுந்து மறைந்த மண்ணுலகத்தைப் பெருமுயற்சி செய்து மீட்டெடுத்த வராகப் பெருமாளுக்கு உவமை கூறப்படுகின்றனர். கடல் புக்கு மண்ணெடுத்து காரேனக் கோட்டின் மிடல் பெரிதெய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர் கருதாதார் உள்ளத் துரந்து நிரைமீட்ட தோள். (பெரும்பொருள் விளக்கம்) |