பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள்73

‘பளிதவணிகன்’ என்பதாக இருக்கக் கூடும். பளிதம் என்னும் சொல் பணிதம் என்று பேச்சு வழக்கில் இருந்திருக்கலாம். பேச்சு வழக்கில் இருந்தபடியே கல்வெட்டில் எழுதப்பட்டது போலும். பளிதம் என்பது பச்சைக் கர்ப்பூரம். இதை வெற்றிலை அடைக்காயோடு சேர்த்து அக்காலத்தில் அருந்தினார்கள்.

“பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து” என்று மணிமேகலைக் காவியம் (கச்சிமாநகர் புக்ககாதை அடி 243) கூறுகிறது. பாசிலைத் திரையல் - வெற்றிலை, பளிதம் - பச்சைக் கர்ப்பூரம். பௌத்த பிக்குகள் வெற்றிலை யருந்துவது வழக்கம், கர்ப்பூரத்தில் சிலவகை உண்டு. ஒருவகைக் கர்ப்பூரத்தைக் குங்குமம், அகில், சந்தனம் இவற்றை இழைத்த குழம்புடன் சேர்த்து உடம்பில் பூசினார்கள். கர்ப்பூரத்தில் சில வகை உண்டு என்று இதனால் தெரிகிறது. பத்தாம் பரிபாடலில் ‘செங்குங்குமச் செழுஞ்சேறு, பக்கஞ் செய்யகில் பலபளிதம்’ 25 பலபளிதம் - பலவாகிய கருப்பூரம் என்று இதற்குப் பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். பரிபாடல் பலபளிதம் என்று கூறுவதைச் சிலப்பதிகாரம் ‘தொகு கருப்பூரம்’ என்று கூறுகிறது.26 இந்தப் பளிதங்கள் தமிழ் நாட்டுப் பொருளும் அன்று. பாரத நாட்டுப் பெருளும் அன்று. அவை சாவக நாட்டிலிருந்து (கிழக்கிந்தியத் தீவுகள்) கப்பலில் கொண்டு வரப்பட்டவை.

இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள பணிதம் என்பது பளிதமாக (கர்ப்பூர வகை) இருக்கக்கூடும். எனவே பணித வணிகன் என்பது பளிதவணிகன் ஆக இருக்கலாம். நெடுமூலன் என்பது ‘நெட்டு மூலன்’ என்று தவறாக எழுதப்பட்டிருக்கிறது.

பளித (பணித) வாணிகனாகிய நெடுமூலன் இந்த மலைக் குகையில் கற்படுக்கைகளை அமைப்பதற்காகப் பொன் கொடுத்தான் என்பது இந்தத் தொடரின் பொருள். அவன் கொடுத்த பொன்னின் மதிப்பு இந்தக் குறியினால் எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் குறியின் மதிப்பெண் என்ன என்பது தெரியவில்லை.

அடுத்த கல்வெட்டு இது.