தமிழில் சமயம் - புத்த ஜாதகக் கதைகள் | 77 |
“நீர் வேண்டியதை வேண்டியவாறே தந்தேன். வேறு ஏதேனும் வரம் கேளுங்கள்.” “சக்கனே! தாங்கள் என் முன்பு இனி வராமலிருக்க வரம் வேண்டுகிறேன்.” “நல்லவர்களாக வாழ்கிற ஆண்களும் பெண்களும் என்னைக் காண விரும்புகிறார்கள். நீர் மட்டும் என்னை வரவேண்டாமென்று கூறுகிறீர். என்னைப் பார்ப்பதனால் உமக்கு என்ன ஆபத்து நேரிடும்?” “தங்களுடைய தெய்வீகமும் மேன்மையும் புகழும் உயர்ந் தவை. தங்களை நான் காணும்போது இந்தச் சிறப்புகள் என் மனத்தை மாற்றி, அவற்றைப் பெறுவதற்கு என் மனத்தில் ஆசையைத் தூண்டவும் கூடும். இதுவே நான் தங்களைப் பார்ப்பதனால் உண்டாகும் ஆபத்து” என்று கூறினார் அகித்தி முனிவர். சக்கன், “நல்லது முனிவரே! இனி நான் தங்களிடம் வரமாட்டேன்” என்று கூறி, அகித்தி முனிவரிடம் விடைபெற்றுப் போய் விட்டார். அகித்தி முனிவர், தாம் வாழ வேண்டிய காலம் வரையில் வாழ்ந்து யோகத்தின் மூலம் மனத்தைப் பண்படுத்திப் பின்னர் பிரமலோகத்தில் பிறந்தார். இந்தக் கதையைக் கூறியபின் பகவன் புத்தர் “அந்தக் காலத்தில் அனுருத்தர் சக்கனாகவும், நான் அகித்தி முனிவராகவும் இருந்தோம்” என்று பிறப்பு ஒற்றுமையைக் கூறினார். அடிக்குறிப்புகள் 1. தமிள இராச்சியம் என்பது தமிழ்நாடு, கவீரபட்டணம் என்பது காவிரிப்பூம்பட்டினம். 2. நாகத்தீவு என்பது இலங்கைத்தீவின் பழைய பெயர். 3. காரைத்தீவு என்பது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்துள்ள ஒரு தீவு. |