| தமிழகக் கலை வரலாறு - சிற்பம் - கோயில் | 253 |
மற்றொரு சிறப்பு என்னவென்றால், இப் பாறைக்கோயில்கள் எல்லாம் ஓர் இடத்திலேயே - மகாபலிபுரத்திலேயே - அமைந்திருப்பது தான். ஒரே இடத்திலே அமைந்திருப்பதனாலே, இந்த விமானங்களின் வெவ்வேறு விதமான அமைப்பை, ஒருமிக்க ஒரே இடத்தில் காணக்கூடியதாக இருக்கிறது. பழைய செங்கற் கட்டிடங்களின் மாதிரி அமைப்பான இந்தப் பாறைக் கோயில்களை நம்மால் இயன்றவரையில் ஆராய்வோம். இப் பாறைக் கோயில்களை, மாடக்கோயில்கள் என்றும் சாதாரணக் கோயில்கள் என்றும் இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். மீண்டும் இவற்றைத் திராவிடக் கோயில்கள் என்றும் வேசாக் கோயில்கள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவற்றை விளக்குவோம். “அர்ச்சுனன் இரதம்,” “தர்மராச இரதம்,” “சகா தேவ இரதம்” என்னும் பாறைக் கோயில்கள் மாடக் கோயில்களின் அமைப்பாகும். மற்றவை எல்லாம் சாதாரணக் கோயில்களின் அமைப்பாகும். “அர்ச்சுனன் இரதம்” என்னும் பாறைக் கோயில், இரண்டு நிலை உடைய மாடக் கோயில். “தர்மராச இரதம்” என்னும் பாறைக்கோயில் மூன்று நிலைகளையுடைய மாடக்கோயில். “சகாதேவ இரதம்” என்பதும் மூன்று நிலையுடைய மாடக் கோயிலாகும். “அர்ச்சுனன் இரதம்,” “தர்மராச இரதம்” என்னும் கோயில்கள் திராவிட வகையைச் சேர்ந்த மாடக் கோயில்கள். “சகாதேவ இரதம்” என்பது வேசர வகையைச் சேர்ந்த மாடக் கோயில். நரசிம்மவர்மன் மாடக் கோயில்களைக் கற்பாறைகளில் அமைப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, பல மாடக் கோயில்கள் நமது நாட்டில் இருந்தன. ஆனால், அம் மாடக் கோயில்களை ஏனைய சாதாரணக் கோயில்களைப் போலவே, செங்கல்மரம் சுண்ணம் முதலிய பொருள்களினால் கட்டப் பட்டவை. நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசு சுவாமிகளும், திருஞான சம்பந்தரும், இவர்களுக்குப் பின்னர் இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருமங்கை ஆழ்வாரும், தமது பாசுரங்களிலே சில மாடக்கோயில்களைக் கூறுகிறார்கள். |