சிற்பக் கலை* கட்டிடக் கலையைவிட சிற்பக் கலை நுட்பமானது. மனிதன் விலங்கு பறவை மரம் செடி மலை கடல் முதலிய இயற்கை உருவங்களையும், கடவுள் தெய்வம் அரக்கர் முதலிய கற்பனை உருவங்களையும், அழகுபட அமைப்பதே சிற்பக் கலையாகும். காவியப் புலவர் கற்பனைகளை அமைத்து நூல் எழுதுவது போலவே, சிற்பக் கலைஞரும் (ஓவியப் புலவருங்கூட) தமது கற்பனைகளினாலே பலவகையான சிற்பங்களை அமைக்கிறார்கள். சிற்பக் கலைகள், கண்ணையுங் கருத்தையும் கவர்ந்து மனத்திற்கு இன்பங்கொடுக்கும் இனிய கலைகள். அவற்றின் அழகும் அமைப்பும் எல்லோருக்கும் உணர்ச்சி கொடுத்து மகிழ்வூட்டுகின்றன. ஆனால், அவற்றில் சிறிது கருத்தூன்றிக் காண வேண்டும். சற்றுக் கலைச்சுவையும் இருக்க வேண்டும். இக்கலையுணர்வு பெற்றோர், அழகிய கலைப் பொருள்களைக் காணுந்தோறும் புதியதோர் இன்ப உலகத்திலே வாழ்கிறார்கள். சிற்பம் அமைக்கும் பொருள்கள் மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், பஞ்சலோகம் முதலியவைகளினால் சிற்ப உருவங்கள் அமைக்கப்படுகின்றன. “கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை பத்தே சிற்பத் தொழிற் குறுப் பாவன” என்பது திவாகர நிகண்டு1 “வழுவறு மரனும் மண்ணுங் கல்லும் எழுதிய பாவையும்....” என்றும், |