பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 133

சாசனச் செய்யுள்

கைப்பயலாம் பூவைநகர்க் காமவில்லி சர்ப்பகிரி
யப்பனுக்கு நற்பொலியூட் டாக்கினால் - ஒப்பாவா
லென்னம்மை முப்பத் திரண்டறமுங் கற்பித்த
தன்னம்மை ஏரி தனை.

குறிப்பு :- ‘கைப்பயலாம்’ என்றிருப்பது ‘கைப்புயலாம்’ என்றிருக்கவேண்டும். சர்ப்பகிரியப்பன் - சேஷாத்திரிநாதன், வேங்கடேசப்பெருமாள். வேங்கடமலைக்குச் சேஷாத்திரி என்னும் பெயரும் உண்டு.

நின்றாடுவான்

இடம் : ஆந்திர தேசத்துக் கோதாவரி மாவட்டம், இராமச்சந்திர புரம் தாலுகா, திராட்சாராமம் என்னும் ஊரில் பீமேசுவரர் கோவில்.

பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு, எண் 1026. (No. 1026. S. I. I. Vol. IV. )

விளக்கம் : திராட்சாராமத்தின் பெயர் தமிழில் இடர்க் கரம்பை என்று கூறப்படுகிறது. வீமேச்சரர் கோவிலில் நந்தாவிளக்கு எரிப்பதற்காக நின்றாடுவான் என்பவர் தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது. இந்தச் செய்யுளின் கீழே, தெலுங்கு எழுத்தில், “லிகித : வீரராஜேந்திர ஆசரிய்யன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதனால், இந்தக் கல்வெட்டெழுத்தைச் செதுக்கியவன் பெயர் வீரராஜேந்திர ஆசாரியன் என்பது தெரிகிறது.

சாசனச் செய்யுள்

இம்பர் நிகழ விளக்கிட்டான் இடர்க்கரம்பைச்
செம்பொனணி வீமேச்சரந் தன்னில் - உம்பர்தொழ
விண்ணுய்ய நின்றாடு வானுக்கு வேலைசூழ்
மண்ணுய்ய நின்றாடு வான்.