பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்147

சோழனுடைய 10 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் கூறுகிறது.7 இந்தப் பதிகம் இப்போது மறைந்து விட்டது.

28. சதகண்ட சரித்திரம்

சென்னமல்லையர் இயற்றிய சிவசிவ வெண்பாவுக்கு உரை எழுதியவர், தமது உரையில் ‘சதகண்ட சரித்திரம்’ என்னும் நூலிலிருந்து இரண்டு செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். சிவசிவ வெண்பா, சாலிசக ஆண்டு 1690ஆம் ஆண்டில் (கி.பி. 1768ஆம் ஆண்டில்) இயற்றப்பட்டது. இந்நூலின் உரையாசிரியர் இன்னார் என்பது தெரிய வில்லை. இவ்வுரையாசிரியர், மேற்படி நூல் 52ஆம் செய்யுளுரையில், ‘தெரிந்து விளையாடல்’ என்பதற்கு மேற்கோளாகச் சதகண்ட சரித்திரத்திலிருந்து கீழ்க்காணும் செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளார்:

“பண்டையிலும் பதின்மடங்கிற் கண்டனுள னெனவானிற்
     பணிந்த வாய்மை
கொண்டயில்வெங் கணையேந்தி வாருதியைமாருதிமேற்
     கொண்டு நீந்தி
வண்டயிலு நறுங்கூந்தற் சானகியா லவனுயிரை
     மாய்த்த மாயோன்
கண்டுயிலுங் கடலனைய கருணைமுகி லருணபதால்
     கருது வோமே.”     1

“ஊதா விசைவண் டறைமலர்ச்சில்
     லோதி யசுர னுயிர்செகுத்து
நீதா விசைய மெனுமிறை சொற்
     றலைமேற் கொண்டு நெடுஞ்சமர்க்குப்
போதா விசையம் பெய்துசத
     கண்டன் மடியப் பொருதியிட்ட
சீதா விசையம் புகலவருள்
     புரிவ தவடன் றிறனாமால்.”     2

சிவசிவ வெண்பா 98ஆம் பாட்டு, ‘பெருமை’ என்பதற்கு இந்நூல் உரை யாசிரியர் சதகண்ட சரித்திரத்திலிருந்து மூன்று செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். அவை:

நீதி சான்மனு நைமிசத் தருகினு நெடுநாள்
மாத வம்புரி காலையின் வெண்டுழாய் மவுலி