பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்213

“களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத்
தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக்
கையறு துயரமொடு காட்சிக் கவாவி
எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப்
பாடப் படுவோன் பதியொடு நாட்டொடு
முள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப்
பையு ளென்று பழித்தனர் புலவர்.

என்று எடுத்தோதினார் அகத்தியனார்.”

(யாப்பருங்கலம், ஒழிபியல், விருத்தியுரை)

“இயற்பெயர் சார்த்தி எழுத்தள பெழினே
இயற்பா டில்லா எழுத்தா னந்தம்”

என்னும் சூத்திரம் அகத்திய நூலில் ஆனந்த ஓத்தில் உள்ளதாக யாப்பருங்கலம் (உறுப்பியல் எழுத்தோத்து) உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆனந்தக் குற்றம் என்பது பற்றிப் பேராசிரியர் என்னும் உரை யாசிரியர் தொல்காப்பிய உரையில் இவ்வாறு எழுதுகிறார். “இனி ஆனந்த வுவமை என்பன சில குற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுபவாகலின் அவையிற்றை எவ்வாறு கோடு மெனின், அவைகள் தாம் அகத்துள்ளும் பிற சான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா; அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினு மடங்காமை வேறு ஆனந்தவோத்தென்பது ஒன்று செய்தாராயின், அகத்தியமுந் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யும் குற்றம் வேறுபடாவென்பது.”

(தொல்., உவ., சூ. 37, பேராசிரியர் உரை)

இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பல் குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் மீது மலைபடுகடாம் பாடினார். அப்பாடலில் 145ஆம் அடியில், ‘தீயின்ன வொண்செங்காந்தள்’ என்னும் அடியில், பாட்டுடைத் தலைவன் பெயராகிய நன்னன் என்பது தீயொடு அடுத்து வந்தமை யான் ஆனந்தக் குற்றம் என்று பிற்காலத்தவர் சிலர் கூறியதை, மேற்படி மலைபடுகடாத்துக்கு உரை எழுதிய நச்சினார்க் கினியர் மறுக்கிறார். நச்சினார்க்கினியர் எழுதுவது வருமாறு: