பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்229

சிற்றில் பாவை கழங்கம் மனையே
பொற்புறு மூசல் பைங்கிளி யாழே
பைம்புன லாட்டே பொழில்விளை யாட்டே
நன்மது நுகர்த லின்ன பிறவு
மவரவர்க் குரிய வாகு மென்ப.     13

வேந்தர் கடவுளர் விதிநூல் வழியுணர்
மாந்தர் கலிவெண் பாவிற் குரியர்.     14

நாலு வருணமு மேவுத லுரிய
வுலாப்புறச் செய்யுளென் றுரைத்தனர் புலவர்.”     15

நேமிநாத உரையாசிரியர் (சொல்லதிகாரம், 4ஆம் சூத்திர உரை), கீழ்க்காணும் அவிநயச் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்:

“ஒருவன் ஒருத்தி பலரென்று மூன்றே
உயர்திணை மருங்கிற் படர்க்கைப் பாலே
யொன்றன் படர்க்கை பலவற்றுப் படர்க்கை
யன்றி யனைத்தும் அஃறிணைப் பால.”

நவநீதப் பாட்டியலின் பழைய உரை, (91 ஆம் செய்யுள் உரையில்), அவிநயனார் கலாவியல் என்னும் பெயருடன் இரண்டு சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறது. இதனால், அவிநய நூலுக்கு ‘அவிநயக் கலா வியல்’ என்னும் பெயர் வழங்கிய தென்பது தெரிகிறது. இவ்வுரைகாரர் மேற்கோள் காட்டிய சூத்திரங்கள் இவை:

“செவித்திறங் கொள்ளாது தெரியுங் காலைத்
தானே நம்பி மகனே மாணி
யாசானென் றவரி லொருவ ரிழுக்கிலைக்
குற்றம் வகுத்துடன் பாடாமற் சொல்லின்
வென்றியும் பெறுமே.”     1

“அவைபுகு நெறியே யாயுங் காலை
வாயிலி னிரைத்துக் கூறப்புகுங் காலை
இருவரும் புகாஅ ரொருவர் முன்புகிற்
புக்கவன் றொலையு முய்த்தெனு முண்மையின்
இருவருங் கூடி யொருங்குடன் பட்ட
தெரிவுட னுணர்ந்தோர் செப்பின ரென்ப.”     2