| 248 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
இதனால் இவை யாப்பிலக்கண நூல்கள் என்பதும் இந்நூற் செய்யுள்களில் வேற்று பாஷைச் சொற்களும் கலந்திருந்தன என்பதும் தெரிகின்றன. இந்த நூல்களைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 14. கையனார் யாப்பியல் கையனார் என்னும் பெயருள்ள ஆசிரியரை, யாப்பருங்கலக் காரிகை யுரையாசிரியராகிய குணசாகரரும். யாப்பருங்கல உரையாசிரி யரும் தமது உரைகளில் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் கூறுவதிலிருந்து கையனார் என்பவர் யாப்பிலக்கண நூல் ஒன்று செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால், அந்த இலக்கண நூலின் பெயர் என்னென்பது தெரியவில்லை. இந்த உரையாசிரியர்கள், கையனார் என்னும் ஆசிரியரின் பெயரை மட்டும் கூறினரேயன்றி அந்நூலின் பெயரைக் கூறவில்லை. குணசாகரர், கையனார் நூலைப் பற்றி (யாப்பருங்கலக் காரிகை, 40 ஆம் காரிகை யுரையில்) எழுதுவது இது: “முதலயற் சீர்க்கண் இல்லாததனைக் கீழ்க்கதுவாய் என்றும் ஈற்றயற் சீர்க்கண் இல்லாததனை மேற்கதுவாய் என்றும் வேண்டினார் கையனார் முதலாய ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு, “மைதீர் கதுவாய்’ என்று விதப்புரைத்தாரெனக் கொள்க.” “இயைபுத் தொடைக்கு ஏழு விகற்பமும் இறுதிச்சீர் முதலாகக் காட்டினார் கையனார் முதலாகிய ஒருசார் ஆசிரியரெனக் கொள்க.” யாப்பருங்கலக் காரிகை, 41ஆம் காரிகை யுரையில் குணசாகரர், கையனார் நூலிலிருந்து ஒரு செய்யுளை உயிர் எதுகைக்கு மேற்கோள் காட்டுகிறார். அது வருமாறு: “‘துளியொடு மயங்கிய தூங்கிரு ணடுநாள் அணிகிளர் தாரோ யருஞ்சுர நீந்தி வடியமை யெஃகம் வலவயி னேந்தித் தனியே வருதி நீயெனின் மையிருங் கூந்த லுய்தலோ வரிதே.’ இஃது இரண்டா மெழுத் தொன்றாதாயினும் இரண்டா மெழுத்தின்மே லேறிய உயிர் ஒன்றி வந்தமையால் உயிரெதுகை. இது கையனார் காட்டிய பாட்டு.” |