| 250 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
இவ்வாறு இவ் வுரையாசிரியர்கள், எழுதுவதிலிருந்து கையனார் என்னும் ஆசிரியர் இயற்றிய யாப்பிலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது ஐயமறத் தெரிகிறது. கையனார் யாப்பிலக்கண நூலிலிருந்து இவ்வுரையாசிரியர்கள் மூன்று சூத்திரங்களை மேற்கோள் காட்டி யிருக்கிறார்கள். அவை வருமாறு: “இருவா யொப்பினஃ தியைபென மொழிப.” 1 (யாப்பருங்கலக்காரிகை, 17 உரை மேற்கோள்) “உறுப்பி னளவே யொன்றரை யாகும்.” 2 “ஆய்தந் தானே குறியதன் கீழதாய் வலியதன் மேல்வந் தியலு மென்ப.” 3 (யாப்பருங்கலம், எழுத்தோத்து, 2ஆம் சூத்திர உரை மேற்கோள்) இவையன்றிக் கையனாரைப் பற்றியும், அவர் இயற்றிய யாப்பிலக்கண நூலைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை. 15. சங்கயாப்பு சங்கயாப்பு என்னும் பெயருள்ள யாப்பிலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது, யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங்கல (அடியோத்து, 28ஆவது சூத்திரம்) விருத்தியுரையாசிரியர், பாவினங் களுக்குச் சில செய்யுள்களை உதாரணங் காட்டி, பிறவும் சங்கயாப்பிற் கண்டுகொள்க என்று எழுதுகிறார். சங்கயாப்பு என்னும் பெயருள்ள இந் நூலை யார் இயற்றினார், எந்தக் காலத்தில் இயற்றினார் என்பன தெரிய வில்லை. இந்நூற் சூத்திரங்கள் சிலவற்றை, யாப்பருங்கல விருத்தி யுரைகாரர் மேற்கோள் காட்டுகிறார். அவை வருமாறு: “அகர முதலா ஒளகார மீறா யிசையொடு புணர்ந்தவீ ராறு முயிரே. 1 ககரம் முதலா னகரம் ஈறா விவையீ ரொன்பதும் மெய்யென மொழிப. 2 குறிலோ ரைந்தும் அறிவுறக் கிளப்பின் அஇ உஎ ஒவெனு மிவையே. 3 ஆஈ ஊஏ ஐஓ ஒளவெனும் ஏழும் நெட்டெழுத் தென்ற லியல்பே. 4 |