| 276 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
“அளவினாற் பெயர்பெற்றது பன்னிருபடலம்” என்று கூறுகின்றார் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர். “ஒத்தினாற் பிண்டமாயிற்று பன்னிருபடலம்” என்று கூறுகிறார் இளம்பூராண அடிகள். (தொல். பொருள். செய்யுள் - 165-ஆம் சூத்திர உரை). இடைக்காலத்திலே பெரிதும் பயிலப்பட்டது பன்னிரு படலம் என்பது நன்கு தெரிகிறது. இந்நூலைப் பின்பற்றி இதற்கு வழி நூலாகப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலை ஐயன் ஆரிதன் என்பவர் இயற்றினார். “பன்னிருபடலம் முதல் நூலாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஐயனாரிதனாரும் இது கூறினார்” என்று பேராசிரியர் (தொல். பொருள். மரபு), தமது உரையில் எழுதுகிறார். பன்னிருபடலத்தின் வழிநூலாகிய புறப்பொருள் வெண் பாமாலை இப்போது முழுவதும் இருக்கிறது. ஆனால் முதனூலாகிய பன்னிருபடலம் மறைந்துவிட்டது. அகத்திய முனிவரின் மாணவர் பன்னிருவரும் சேர்ந்து புறப்பொருள் இலக்கணம் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு படலம் இயற்றினார் என்றும், அவர்கள் இயற்றிய பன்னிரு படலங்களின் தொகுப்பே பன்னிரு படலம் என்னும் பெயர் பெற்ற நூலாயிற்று என்றும் கூறுவர். என்னை? “மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலம்” என்று புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம் கூறுவது காண்க. பன்னிருப்படலத்துச் சூத்திரம் ஒன்றை இளம்பூராண அடிகள் (தொல். புறத்திணை, ‘அறுவகைப்பட்ட பார்ப்பன பக்கமும்’ என்னும் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டுகிறார். அச்சூத்திரம் இது: “பனியும் வெயிலும் கூதிரும் யாவும் துனியின் கொள்கையொடு தொன்மை யெய்திய தணிவுற் றறிந்த கணிவன் முல்லை” |