தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு | 107 |
பரணர் என்னும் புலவரும் இதைக் கூறுகின்றார்: “பண்ணமை முழவும் பதலையும் பிறவும் கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக் காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர்” - (பதிற்றுப் பத்து - 5ஆம் பத்து: 1: 3-5) இதிலும், பரணர் பதலையைக் கூறுவது காண்க. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் தாம் பாடிய மலைபடுகடாம்என்னும் செய்யுளில், பாணர்கள் காவடியில் வைத்துத் தோளில் தூக்கிக் கொண்டு போன இசைக் கருவிகளின் பெயர்களைக் கூறுகிறார்:- “திண்வார் விசித்த முழவொடு ஆகுளி நுண்ணருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில் மின்னிரும்பீலி அணிதழைக் கோட்டொடு கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின் இளிப்பயிர் இமிரும் குரும்பரந் தூம்பொடு விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை கடிகவர்பு ஒலிக்கும் வல்லாய் எல்லரி நொடிதரு பாணிய பதலையும் பிறவும் கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்” - (மலைபடுகடாம்: 3-13) இவற்றில் பதலை என்னும் இசைக்கருவியும் கூறப்பட்டுள்ளது காண்க. ஓரி என்னும் வள்ளலுடைய சபையிலே ஒரு பாணன் தன்னுடைய குழுவினருடன் சென்று இசைப்பாட்டுப் பாடத் தொடங்கினான். அப்போது அவன், விறலியைத் தன்னுடன் சேர்த்துப் பாடும்படியும் மற்றவர்களை இசைக் கருவிகளை வாசிக்கும்படியும் கூறினான் என்று வன்பரணர் என்னும் புலவர் கூறுகின்றார்: “பாடுவல் விறலி ஓர் வண்ணம், நீரும் மண்முழா அமைமின், பண்யாழ் நிறுமின், கண்விடு தூம்பின் களிற்றுயிர் தொடுமின்,. |