தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு | 119 |
அச்சிரம் அச்சிரம் என்பது மறைந்துபோன சொற்களில் ஒன்று. இச் சொல்லுக்குப் பனிக்காலம் என்பது பொருள். ‘விரிகதிர் மண்டிலம் தெற்கேர்பு வெண்மழை அரிதிற் றோன்றும் அச்சிரக் காலை’ (ஊர்காண் காதை 104-105 அடி) ‘விரிந்த கதிரையுடைய ஆதித்த மண்டிலம் (சூரியன்) மிதுன வீதியிலே எழுந்து இயங்குதலானே வெண்முகில் அரிதாகத் தோன்றும் முன்பனிக் காலம் என்பது இதன் பொருள். பனிப்பெய்கிற மார்கழி, தை மாதங்கள் அச்சிரக் காலம் என்று பெயர் பெற்றன. அச்சிரம் என்னுஞ் சொல் அற்சிரம் என்றும் வழங்கப்பட்டது. இச்சொல் சங்க இலக்கியங்களில் பயிலப்பட்டுள்ளது. ‘அற்சிர வெய்ய வெப்பத் தெண்ணீர் சேமச் செப்பிற் பெறீஇயரோ’ என்பது குறுந்தொகைச் செய்யுள் அடி (277:4-5). ‘குளிர்காலத்தில் அருந்துவதற்கு வெப்பமுள்ள வெந்நீரை உம்முடைய பாத்திரத்தில் பெறுவீராக என்பது இதன் பொருள்.’ ‘அரும்பனி அச்சிரம் (குறும். 68:3), ‘தண்பனி’ ‘வடந்தை யச்சிரம்’ (ஐங்குறுநூறு 223 : 4) ‘வடந்தை தூக்கும் வருபனியற்சிரம்’‘’ (அகம் 235 : 15, 378 : 13). ‘தண்வரல் வாடை தூக்கும் கடும்பனி யச்சிர நடுங்கஞர்.’ - (குறும் 76 : 5-6) ‘கொழுங்கொடி யவரை பூக்கும் அரும்பனி யச்சிரம்’ -(குறும் 82:: 5-6) ‘பின்பனிக் கடைநாட் டண்பனி யச்சிரம் வந்தன்று’ -(குறும் 338 5-6). |