பக்கம் எண் :

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு195

‘மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை கெடுவரை வேங்கடத்து உம்பர்
அறையிறந் தகன்றனர் ... ... ...

- (அகம். 209: 8-10)

இப்புலவர், சோழநாட்டுக் காவிரிக்கரையிலிருந்த அம்பர் என்னும் ஊரின் அரசனான அருவந்தையிடஞ் சென்றார். அவ்வள்ளல் இவரை ஆதரித்து விருந்தளித்தான். அவனைப் புகழ்ந்து வாழ்த்தினார் இப்புலவர். வேங்கடநாட்டு அரசன் புல்லியினுடைய வேங்கட மலையில் பொழியும் மழைத்துளிகளை விட அதிககாலம் வாழ்வாயாக என்று வாழ்த்தித் தன்னுடைய நாட்டையும் தன்னுடைய அரசனையும் நினைவுகூர்கிறார். இதனால் இவருடைய நாட்டுப்பற்றும் அரச பக்தியும் விளங்குகிறது. இவர், அம்பர்கிழான் அருவந்தையைப் பாடிய செய்யுட்பகுதி இது:

“வறன்யான் நீங்கல் வேண்டி என்னரை
நீவிறச் சிதாஅர் களைந்து
வெள்ளிய துடீஇயென் பசிகனைத் தோனே
காவிரி யனையுந் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி யம்பர் கிழவோன்
நல்வரு வந்தை வாழியர், புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே.”

- (புறம். 335: 5-12)

தொல்காப்பிய இலக்கண நூலில், வேங்கடமலை தமிழகத்தின் வட எல்லையாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சரியான வட எல்லை, வேங்கடத்துக்கு அப்பால் உள்ள வட பெண்ணையாற்றின் தென்கரை யாகும். வடபெண்ணை ஆற்றிலிருந்து அக்காலத்துத் தமிழ்நாடு தொடங்கியது. இதற்குச் சில சான்றுகள் உள்ளன. கல்லாடனார் வேங்கட மலைக்கு வடக்கில் ஒரு ஊரில் இருந்தவர் என்பதே இதற்குரிய சான்று களில் ஒன்றாகும். இதுபற்றி இங்கு விரிவாகக் கூறுவது மற்றொன்று விரித்தலாக முடியுமாகலின் விரிவாகக் கூறாமல் விடுகிறோம்.

கல்லாடனார் என்னும் இப்புலவர் பெயரை நோக்கும்போது இப் பெயர் இவருடைய இயற்பெயராகத் தோன்றவில்லை; ஊர்ப்பெயராகத் தோன்றுகிறது. கல்லாடம் என்பது இவர் இருந்த ஊரின் பெயராக .