98 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18 |
திரைச்சீலை என்னும் பொருள் உடைய எழில் என்னும் சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை முதலிய பழைய தமிழ் நூல்களிலே வழங்கப்பட்டுள்ளது. காவிரிப்பூம் பட்டினத்திலே நிகழ்ந்த இந்திர விழாவின் இறுதி நாளிலே கடலில் நீராடுவதற்காகக் கடற்கரைக்குச் சென்ற அரசகுமாரர்களும் செல்வப் பிரபுக்களும் மணற்பரப்பினிலே எழினிகளாக அமைத்த விடுதிகளில் தங்கியிருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. “ அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும் பரத குமரரும் பல்வேறு ஆயமும் ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் தோடுகொள் மருங்கில் சூழ்தரல் எழினியும்” என்று சிலம்பு (கடலாடு காதை 155-158) கூறுகிறது. கோவலனும், மாதவியும் கடல் நீராடக் கடற்கரைக்குச் சென்றனர். மணற்பரப்பிலே புன்னை மரநிழலிலே ஓவியம் எழுதப்பட்ட திரைகளினால் அமைக்கப்பட்ட கூடாரத்திலே தங்கியிருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. “கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழைச் சிறைசெய் வேலி அகவையின் ஆங்கோர் புன்னை நீழல் புதுமணற் பரப்பில் ஓவிய எழினி சூழவுடன் போககி விதானித்துப் படுத்த எண்கால் அமளிமிசை” கோவலனும், மாதவியும் இருந்தனர் என்று சிலம்பு (கடலாடு காதை 166-170) கூறுவது காண்க. (ஓவிய எழினி - சித்திரப் பணி எழுதின திரை. அரும்பதவுரை). சங்ககாலத்திலே நாடக மேடைகளில் எழினியாகிய திரைகள் மூன்று விதமாக அமைக்கப்பட்டிருந்தன. அந்தத் திரைகள் ஒருமுக எழினி, பொருமுகஎழினி, கரந்துவரல் எழினி என்று பெயர் பெற்று இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. “தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேனிலை வைத்துத் தூண்நிழல் புறப்பட மாண்விளக் கொடுத்தாங்கு ஒருமுக எழினியும் பொருமுக எழினியும். |