| நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள் | 61 |
5. வாருணி என்பது, மயக்கந்தரும் மதுபானங்களுக்கும், வருண தேவனுடைய மகளுக்கும் பெயர். 6. வாருணிதேவிகள், மதுபானம். 7. காபாலிகர், பிச்சையைக் கபால பாத்திரத்தில் (மண்டை ஓட்டில்) பெறவேண்டும் என்பது மரபு. கபாலம் காணாமற்போய் விட்டபடியால், தேவசோமை கவலைப்படுகிறாள். 8. காபாலிகன் தர்க்க சாஸ்திரத்தைத் தனக்குத் துணைகொண்டு சமாதானம் அடைகிறான். 9. மண்டை என்பது மண்டை ஓடு அல்ல. மரம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரம். இதற்கு மண்டை என்று பெயர். பௌத்த பிக்ஷுக்கள் இப்பாத்திரத்தில் பிச்சை பெற வேண்டும் என்பது மரபு. 10. இராசவிகாரை என்பது காஞ்சிபுரத்தில் இருந்த செல்வமிக்க பௌத்த மடம். 11. ஏகம்பம் என்பது, காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பர ஈசுவரர் கோவில். இங்கே, பண்டைக்காலத்தில் காபாலிகர் இருந்தனர் என்பது புராணங்களினாலும் தெரியவருகிறது. 12. சம்விரதிசத்தியம், பரமார்த்தசத்தியம் என்பன, பௌத்தரில் ஒரு சாராருடைய தத்துவசாத்திரத்தில் கூறப்படுவன. காபாலிகன் இந்தச் சொற்களைக் கூறி பௌத்த பிக்குவைக் கேலி செய்கிறான். 13. கரவடன் என்பவர் களவு நூலை எழுதியவர் என்று கூறப்படுகிறார். இவர் உண்மையில் இருந்தவர் அல்லர் என்றும் கற்பனைப் பெயர் என்றும், அறிஞர்கள் கருதுகிறார்கள். வேதாந்தம் என்பது உபநிஷத்துக்கள். உபநிஷத்தில் உள்ள கருத்துக்கள் சில புத்தருடைய உபதேசத்திலும் உள்ளன. காபாலிகன் கூறுவதுபோல மகாபாரதத்திலிருந்து புத்தர் எதையும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. 14. வீதராகன் என்பதுஆசையற்றவன் என்று பொருள்படும். புத்தருக்கு வீதராகன் என்ற பெயரும் உண்டு. 15. பழைய தேரவாதப் பௌத்த மதத்தில், கணபங்கம் கூறப்படுகிறதே யன்றி மாயாவதம் கூறப்படவில்லை. ஆனால், மகாயான பௌத்த மதத்திலே மாயாவாதம் கூறப்படுகிறது. ஏகான்ம வாதியான சங்கராச்சாரியார், மகாயான பௌத்த மதத்திலிருந்து மாயாவாதத்தை எடுத்துக் கொண்டார் என்பர். 16. பாணிக்கிரகணம் செய்கிறான் என்பதற்குக் கையைப் பிடிக்கிறான் என்றும், மனைவியாக்கிக் கொள்கிறான் என்றும் இரண்டு பொருள் உள்ளன. |