| நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள் | 87 |
நீறு சிவபெருமான் தமது உடம்பில் நீறு அணிந்திருக்கிறார். நீறு, அவருடைய பராசக்தியைக் குறிக்கிறது போலும். ‘பராவணமாவது நீறு’ என்பது சம்பந்தர் வாக்கு11 நீறு பாசத்தை ஒழிப்பது என்று வேறு பொருளும் கூறப்படுகிறது. ‘பாசமும் அங்கது கழியப்பண்ணும் திரு வெண்ணீறும்’ என்பது கோயிற் புராணம். நூல் மார்பில் அணிந்திருக்கிற பூணூல் குண்டலினி சக்தி என்பர்; வேதாந்தத்தைக் குறிக்கிறது என்றும் கூறுவர். ‘நூலது வேதாந்தம்’ என்பது திருமந்திரம். சிலம்பும் கழலும் தாண்டவப் பெருமான் தமது திருப்பாதங்களில் சிலம்பையும் வீரக்கழலையும் அணிந்திருப்பதாகக் கற்பிக்கப்படுகிறார். ஆன்மாவின் பழைய வினைகளையும் பிறவித் துன்பத்தையும் அறுத்து வீடுபேறளிப்பவர் தாம் ஒருவரே என்பதை இவை உணர்த்துகின்றன என்பர். ‘கள்ளவினை வென்று பிறப்பறுக்கச் சாத்திய வீரக்கழலும்’ என்பது போற்றிப் பஃறொடை வெண்பா. வேதத்தையே சிலம்பாக அணிந்துகொண்டார் என்று கூறப்படுவதும் உண்டு. துடி சிவபெருமான் தமது வலக்கையொன்றில் துடி (உடுக்கை) ஏந்தியுள்ளார். துடி ஐஞ்செயல்களில் முதலாவதாகிய படைக்கும் செயலைக் காட்டுகிறது. ‘தோற்றம் துடியதனில்’ என்பதும்திருமந்திரம். தீச்சுடர் நடராசர் தமது கையொன்றில் தீச்சுடரை ஏந்தியிருக்கிறார். இது ஐஞ்செயல்களில் ஒன்றான அழிக்கும் செயலைக் குறிக்கிறது. ‘அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம் என்பதுதிருமந்திரம். “சங்காரச் சத்தியான தீச்சுடரானது மகா மாயையின் மேலிருக்கிற பொருள்களை வெளிப்படுத்துகிறதாயும், பாசங்களை எரித்து நீறாக்குகிறதாயும் இருக்கிறது” என்பது காமிகாகமம்.12 |