பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்307

  எடுத்தெறிந் திடுவனிப் போதே நம்மொழி.
அடுத்தநம் படைஞரோ பகைவர்; அவர்நமைக்
கெடுத்தநா ரணற்கே கேளொடு கிளைஞர்,
ஆதலின் இஃதே தீதறு முறுதி ...
 20என்னைநம் ஊகம்! என்னைநம் ஊக்கம்!
முன்னர்யாம் அறியா இன்னநற் சுருங்கையில்
துன்னிருள் வழிதனி தொடர்ந்திவண் சேர்ந்தோம்.
ஊக்கமே பாக்கியம். உணர்விலார் வேறு
பாக்கியம் ஊழெனப் பகர்வதெல் லாம்பாழ்.
 25சாக்கியம் வேறென்? சாத்தியா சாத்தியம்
அறிகுறி பலவால் ஆய்ந்தறிந் தாற்றும்
திறமுள ஊகமே யோகம்; அன்றி
  (நட்சத்திரங்களை நோக்கி)
  வான்கா டதனில் வறிதே சுழலும்
மீன்காள்! வேறும் உளதோ விளம்பீர்?
 30மதியிலா மாக்கள் விதியென நும்மேற்
சுமத்தும் சுமையும் தூற்றும் சும்மையும்
உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும்
அமைக்கும் குணமும் அதில்வரு வாதமும்.
யுக்தியும் ஊகமும் பக்தியும் பகைமையும்.
 35ஒன்றையும் நீவிர் உணரீர்! அஃதென்?
வென்றவர் பாசறை விளங்குவ தஃதோ!
இங்குமற் றுலாவுவன் யாவன்? பொங்குகால்
வருந்தொறும் சிலமொழி வருவ.அஃதோ
திரும்பினன் ! ஒதுங்குவம். தெரிந்துமேற் செல்குவம்.

(புருடோத்தமன் தனியா யுலாவி வர)


சாத்தியாசாத்தியம்- முடிவதும் முடியாததும். யோகம் - அதிர்ஷ்டம். வான்காடு - வானமாகிய காடு. மீன் - விண் மீன். சும்மை - ஒலி.